மத்திய அரசு தனது பிம்பத்தை காக்க தடுப்பூசி ஏற்றுமதி செய்தது.. மிக கொடூரமான குற்றம்.. ஆம் ஆத்மி சாடல்
டெல்லி: நாட்டு மக்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசிகளை வழங்காமல் ஏற்றுமதி செய்தது கொடூரமான குற்றம் என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் கடந்த சில தினங்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தைத் தாண்டியே பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் 24-ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு ஏற்படாது- முதல்வர் உறுதி
டெல்லி, பெங்களூரு எனப் பல முக்கிய நகரங்களில் மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன.
கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி
கொரோனா தடுப்பூசி பணிகளை வேகப்படுத்த, 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதித்திருந்தது. இருப்பினும், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாகப் பல மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், இந்தியா சுமார் 93 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.
கொடூர குற்றம்
நாட்டில் இருக்கும் மக்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்காமல் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ததைப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இது குறித்து டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறுகையில், நமது சொந்த நாட்டில் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில், சர்வதேச அளவில் தனது பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளத் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்தது கொடூரமான குற்றம்.
இளைஞர்களைக் காப்பாற்றியிருக்கலாம்
கொரோனாவால் பெரிதும் பாதிக்கப்படாத, கொரோனா கட்டுக்குள் இருக்கும் நாடுகளுக்கே இந்தியா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் அதிகப்படியான இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். நாம் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யாமல் இந்தியர்களுக்கு அளித்திருந்தால், பல ஆயிரம் இளைஞர்களைக் காப்பாற்றியிருக்கலாம்.
மூன்று மாதங்கள் போதும்
குறைந்தபட்சம் இப்போதாவது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகள் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள மாநிலங்களுக்கு வழங்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். போதியளவில் மத்திய அரசு தடுப்பூசி வழங்கினால் மூன்று மாதங்களில் டெல்லியுள்ள உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போட முடியும்" என்று அவர் தெரிவித்தார்.