தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியுங்கள்.. பிரதமர் மோடிக்கு அனில் அகர்வால் கடிதம்
டெல்லி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதி உள்ளார்
தூத்துக்குடியில் உள்ள வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதி போராடிய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஆண்கள், பெண்கள் உள்பட 15 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக அறிவித்த தமிழக அரசு அந்த ஆலையை நிரந்தரமாக மூடி சீல் வைத்தது.
ஆனால் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்குவதற்காக ஒத்திவைத்துள்ளது.
அதிக ஆபத்துள்ள கொரோனா நோயாளிகளுக்காக கிண்டியில் சிறப்பு மருத்துவமனை.. விஜயபாஸ்கர்
பிரதமருக்கு கடிதம்
இந்த சூழலில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நலனுக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற தங்களுடைய நியாயமான வேண்டுகோளை பிரதமர் மோடி ஏற்க வேண்டும் என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
தாமிர இறக்குமதி அதிகம்
கடந்த 4 ஜூன் 2020 என்ற தேதியில் அந்தக் கடிதத்தை அனில் அகர்வால் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்ட முக்கிய அம்சங்களை இப்போது பார்ப்போம். ஒட்டுமொத்த பொருளாதார நலனுக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா அதிக தாமிரத்தை இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது.
40 ஆயிரம் கோடி நஷ்டம்
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பல ஆயிர தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். இது புலம்பெயரும் தொழிலாளர்களை உருவாக்கும் இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு அனைத்து வகையிலும் சுமார் 40ஆயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. தாமிர இறக்குமதியில் சீனா ஆதிக்கம் செலுத்துகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 400% சீனாவில் இறக்குமதி அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவின் தாமிர சந்தையைச் சீனா கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது.
சுற்றுச்சூழலுக்குத் தீங்கு இல்லை
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் மற்றும் தெர்மல் பவர் பிளாண்ட், சிறந்த தொழில்நுட்பங்களுடன் கூடிய சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத தொழிற்சாலைகள் . இவை இந்தியாவிற்கான கிரீடத்தின் முக்கிய ஆபரணமாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதற்கிடையே தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் முன்னதாக வழக்கில் இறுதி வாதத்தில் வாதிடுகையில், மக்களுக்கு சுத்தமான காற்று, குடிநீர் வழங்குவது அரசின் கடமை என்ற அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு கொள்கை முடிவு எடுக்கபட்டது, ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்னர் தூத்துக்குடி சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மற்றும் காற்றின் தரம் சிறப்பாக இருக்கிறது என்று கூறியிருந்தது.