மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை.. சிறப்பம்சங்கள் என்னென்ன?
டெல்லி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் உள்ள சிறப்பம்சங்களையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் சிறந்த மருத்துவமனையாக கருதப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அமைக்க மத்திய பட்ஜெட்டில் கடந்த 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஈரோடு, மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அந்த இடங்களை மத்திய அரசின் தேர்வுக்குழு பார்வையிட்டு ஆய்வு நடத்தியது.
|
எங்கு அமையும்
மதுரை தோப்பூர், தஞ்சை செங்கிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் அதற்கான வசதிகள் இருப்பதாக தேர்வுக் குழுவினர் கண்டறிந்தனர். ஆனால் மதுரைதான் எய்ம்ஸ் அமைக்க தகுதியான இடம் என்று தேர்வு செய்யப்பட்டது. ஆனாலும் அறிவிக்கப்படாததால் எங்கு அமையும்? என்பதில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
1264 கோடி ரூபாயில்
இந்நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என கூறப்பட்டது. இதையடுத்து நேற்றைய தினம் மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தது. பிரதமர் சுவஸ்த்யா சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ரூ. 1264 கோடியில் அமைக்கப்படும். அது போல் தெலுங்கானாவில் பிபிநகரில் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையில் ரூ.1028 கோடியில் கட்டப்படும் என்றும் தெரிகிறது.
750 படுக்கைகள்
மதுரை தோப்பூரில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய உயர்தர சிகிச்சை அரங்குகள், மேலும் 100 மருத்துவ படிப்புக்கான வசதி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள், நர்ஸிங் படிப்புகள் ஆகியவை இங்கு இடம் பெறுகிறது.
உள்நோயாளிகள்
15 முதல் 20 சூப்பர் சிறப்பு சிகிச்சை துறைகள் ஏற்படுத்தப்படவுள்ளன. ஒரு நாளைக்கு 1500 புறநோயாளிகளும் ஒரு மாதத்துக்கு 1000 உள்நோயாளிகளும் சிகிச்சை பெறும் வசதி உள்ளது. இது மட்டுமல்லாமல் இந்த மருத்துவமனையால் 3000 பேருக்கு வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகிறது.
3 கோடி பேர்
இந்த மருத்துவமனையால் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 17 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 கோடி மக்கள் பயனடைவார்கள் என தெரிகிறது.