கொரோனா ஒருபக்கம் .. படையெடுத்த வெட்டுக்கிளிகள்.. பாய காத்திருக்கும் சீனா.. இந்தியா மீண்டு வரும்!
டெல்லி: ஒரு புறம் கொரோனா எப்படி இந்திய பொருளாதாரத்தை சிதைத்து விட்ட நிலையில் மறுபுறம் வெட்டுக்கிளிகள் கூட்டம் வந்து இந்தியாவின் உணவு உற்பத்தியை காலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. சரி இவையெல்லாம் வைரஸ், பூச்சி எப்படியாவது ஒழித்துவிடலாம் என எண்ணினால் எல்லையில் அர்த்தமே இல்லாமல் சீனா படையெடுக்க காத்திருக்கிறது. இத்தனை சோதனைகளிலிருந்தும் இந்தியா மீண்டு வருமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா உறுதியான முதல் நோயாளி கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 60 நாட்களாக அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும், சுற்றுலா தலங்களும், கோயில்களும், பொது போக்குவரத்து என எதுவும் இயங்கவில்லை.
இதனால் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளின் பொருளாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. இதை மீட்டெடுக்க கொரோனா பாதிப்புகள் அதிகமாக இருக்கும்போதிலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
லோகஸ்ட் வெட்டுக்கிளிகளை ஒழிக்க முதல்முறையாக களம் இறங்கும் ஆளில்லா விமானங்கள்!
2 மாதங்கள்
ஏற்கெனவே பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இந்த நிலையில் கொரோனாவால் பொருளாதார வளர்ச்சி மேலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இது ஒரு புறமிருக்க கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. 2 மாதங்கள் கடும் லாக்டவுன் அமலில் இருந்தும் இந்த அளவுக்கு பாதிப்பு இருப்பது அரசை கவலையடையச் செய்துள்ளது. இதை குறைக்க ஆலோசனை செய்து வருகிறது.
சண்டை
அடுத்தது இந்தியா அன்னிய செலாவணி முதலீட்டில் சட்டத்திருத்தம் கொண்டு வந்ததால் பொருளாதார பாதிப்பில் உள்ள பெருநிறுவனங்களை வாங்க முடியாத நிலை உள்ளதே என்ற காண்டில் சீனா தேவையில்லாமல் நம்மை சீண்டுகிறது. எல்லையில் சீனா தன் படைகளை குவித்துக் கொண்டே இருப்பதை பார்த்தால் சண்டைக்கு வா என நம்மை அழைக்காமல் விடாது என்றே தெரிகிறது.
விஸ்வரூபம்
மற்றொரு பிரச்சினையாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது வெட்டுக்கிளிகள். இவை உணவு உற்பத்திக்கே சவால் விடும் வகையில் புலம்பெயர்ந்து வருகின்றன. கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவதால் கொரோனாவால் போட்ட முதலீட்டையும் எடுக்க முடியாமல் திணறும் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். இந்த பூச்சிகளை அழிக்க அரசு ஏதாவது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
சாதுர்யம்
இப்படியாக ஒவ்வொரு பிரச்சினையாக இந்தியாவை சூழ்ந்து கொண்டுள்ளது. மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா எந்தவித பிரச்சினையையும் சமாளிக்கும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு இந்தியருக்கும் இருக்கிறது. வல்லரசு நாடுகளை காட்டிலும் கொரோனா பாதிப்பை இந்தியா சாதுர்யமாக கையாண்டு வருவதை பார்க்கும் போது இந்தியா எந்த பிரச்சினையையும் சமாளித்துவிடும்.