தமிழகம், புதுவையில் முழு ஊரடங்கு.. அன்லாக் 4.0 பெயரில் தடை போட்ட மத்திய அரசு.. முழு விவரம்!
டெல்லி: தமிழகம், புதுவையில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளிலும் அது போன்ற முடக்கத்திற்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. அந்த தடைகள் அன்லாக் 4.0 என்ற பெயரில் இன்று முதல் அமலாகிறது.
நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இன்று முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பொது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. எனினும் மத்திய அரசு அன்லாக் 4.0 என்பதன் பெயரில் முக்கிய தளர்வுகளையும் அளித்துள்ளது.
அதன்படி நாடு முழுவதும் எதற்கெல்லாம் அனுமதி , எதற்கெல்லாம் தடை, அரசு விதித்த வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் பொது ஊரடங்கு .. செப்.30 வரை தளர்வுகளுடன் நீட்டிப்பு.. முதல்வர் அறிவிப்பு
மெட்ரோ ரயில் சேவை
மெட்ரோ ரயில் சேவை வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தால் வெளியிடப்படும். சமூக, கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசாரம், மதம், அரசியல் கூட்டங்களை 100 பேருடன் வரும் செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் நடத்தி கொள்ள அனுமதி. இந்த கூட்டங்களில் பங்கேற்போர் கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். தெர்மல் ஸ்கேனிங் மூலம் உடல் வெப்பநிலையை கட்டாயம் சோதிக்க வேண்டும். சானிடைஸர் கொண்டு கைகளை சுத்தப்படுத்த வேண்டும்.
50 சதவீத ஆசிரியர்கள்
செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் திறந்த வெளி தியேட்டருக்கு அனுமதி. பள்ளி, கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை செயல்படாது. ஆன்லைன் வகுப்புகளுக்கு அனுமதி உண்டு. நோய் கட்டுப்பாட்டு பகுதி அல்லாத இடங்களில் 50 சதவீதம் ஆசிரியர் மற்றும் ஆசிரயர் அல்லாத ஊழியர்கள் ஆன்லைன் கல்வி கற்பிக்கவும், டெலி கவுன்சலிங் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.
நோய் கட்டுப்பாடு பகுதிகள்
அது போல் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் வரை நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் அல்லாத இடங்களில் உள்ள பள்ளிகளுக்கு சென்று சந்தேகங்களை கேட்டு வரலாம். இதற்கு பெற்றோர்களின் ஒப்புதல் கடிதம் அவசியமாகும். தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் பயிற்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஐடிஐ, குறுகிய கால பயிற்சி நிறுவனங்கள் செயல்படலாம். ஆராய்ச்சி மாணவர்கள், முதுகலை மாணவர்கள், தொழில் கல்வி குறித்த படிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
இ பாஸ் தேவையே இல்லை
கன்டெய்ன்மென்ட் பகுதிகளில் லாக்டவுன் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீடிக்கும். மாநில அரசோ, யூனியன் பிரதேசமோ கன்டெய்ன்மென்ட் இல்லாத பகுதிகளில் முழு லாக்டவுனை அமல்படுத்தக் கூடாது. அதிலும் மத்திய அரசின் ஆலோசனை இல்லாமல் அமல்படுத்தக் கூடாது. மாவட்டத்தின் உள்ளேயும், மாவட்டம் விட்டு மாவட்டமும் மக்களோ, சரக்குகளோ செல்ல எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை. இதற்கான ஈபாஸோ, சிறப்பு அனுமதியோ தேவையில்லை.
கட்டுப்பாடுகள் விதிப்பு
கடைகள் போதிய சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 65 வயதுக்கு மேற்பட்டோர், துணை நோய் உள்ள நபர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்குள்பட்ட குழந்தைகள் அவசிய காரணமின்றி வீட்டை விட்டு வெளியே வர கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆரோக்கிய சேது செயலியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு மத்திய அரசு அன்லாக் 4.0வின் கீழ் செயல்பாடுகளை அறிவித்துள்ளது.
எதற்கெல்லாம் அனுமதி இல்லை
- செப்டம்பர் 30-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், கல்வி, பயிற்சி நிறுவனங்கள் திறக்க தடை தொடரும். ஆன்லைன் வகுப்புகள் தொடரலாம்.
- சினிமா தியேட்டர்கள், நீச்சல்குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், தியேட்டர்கள் திறக்கப்படாது.
- சர்வதேச விமான பயணம் உள்ளிட்டவைகளுக்கு தடை தொடரும்.
- நோய் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளில் மத்திய அரசின் அனுமதியின்றி முழு ஊரடங்கு அமல்படுத்த தடை.