நம்ப முடியாது.. சீனப் படையினர் வாபஸானாலும்.. உஷார் நிலையைக் கைவிடாத இந்தியா!
டெல்லி: கால்வன் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து சீன படைகள் சற்று பின்வாங்கியிருந்தாலும் இந்தியா படைகள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அதற்கு காரணம் 1962 ஆம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம்தான் என்கிறார்கள் மூத்த அதிகாரிகள்.
Recommended Video
லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 60 நாட்களாக இந்தியா சீனா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த மே 5-ஆம் தேதி பாங்காங் ஏரி பகுதியில் இரு துருப்புகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து ராணுவ அதிகாரிகள் அளவிலான பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதில் தாங்கள் அமைதியை விரும்புவதாக கூறிய சீனா, பதுங்குவது போல் பதுங்கி, திடீரென ஜூன் 15ஆம் தேதி இரவு அத்துமீறி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தின.
கால்வன் மோதல்.. வீரமரணமடைந்த 20 இந்திய வீரர்களுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் மவுன அஞ்சலி
ராணுவ கமாண்டர்
இந்த மோசமான தாக்குதலால் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். அது போல் இந்திய வீரர்கள் திருப்பி தாக்கியதில் சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து ராணுவ கமாண்டர் அளவில் 3 முறை பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. எனினும் சமரசம் ஏற்படவில்லை.
பாதுகாப்பு ஆலோசகர்
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மோடி லே பகுதியில் ஆய்வு நடத்தினர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சீன ராணுவத்தினருடன் தொலைபேசியில் பேசினார். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த உரையாடலில் இரு துருப்புகளும் பின்வாங்க ஒப்புக் கொண்டன. இதையடுத்து சீன ராணுவம் எல்லை பகுதியிலிருந்து 1 கி,.மீ. தூரம் பின்வாங்கியது.
முதல்படி
பதற்றத்தை தணிக்க இதுதான் முதல்படி என கூறப்படுகிறது. எனினும் இந்திய வீரர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காரணம், 1962-ஆம் ஆண்டு நடந்த சம்பவம்தான். அதாவது இது ஆரம்பகட்ட நடவடிக்கைதான். எனினும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சீனாவை நம்ப முடியாது என்பதே பரவலாக பேசப்படுகிறது.
நம்பிக்கையிழப்பு
இதற்கு காரணம் 1962-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி நாளிதழில் வந்த தலைப்பு செய்திதான். இந்த செய்தி தற்போது ஜூலை மாதம் வைரலாகி வருகிறது. அதில் கால்வன் பள்ளத்தாக்கில் இருந்து படைகளை திரும்ப பெற்றது சீனா என இடம்பெற்றிருந்தது. இதைத் தொடர்ந்து சரியாக 96 நாட்களுக்கு பிறகு அதாவது அக்டோபர் மாதம் இந்தியா சீனா இடையே கால்வனில் போர் தொடங்கியதுதான் சீனா மீது நம்பிக்கையிழப்பிற்கு காரணம் ஆகும்.
கோர்க்காக்கள்
ஆம்.1962 ஆம் ஆண்டு என்ன நடந்தது என்பதை பார்ப்போம். கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்திய இந்திய ராணுவம் மலை முகடுகளில் கோர்க்காக்களை குவித்தது. அந்த ஆண்டு ஜூலை 6-ஆம் தேதி அந்த பகுதியில் கோர்க்காக்கள் குவிந்திருப்பதை கண்ட சீன ராணுவம் தங்கள் தலைமையகத்திற்கு தகவல் தெரிவித்தது.
எல்லை
4 நாட்கள் கழித்து 8-இல் 1 பகுதி கோர்க்கா படைகளை 300 சீன ராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். ஜூலை 15-ஆம் ஆண்டு தேதி கால்வன் பள்ளத்தாக்கு பகுதியிலிருந்து 200 மீட்டர் தொலைவிற்கு சீன ராணுவம் பின்வாங்கியதாக பத்திரிகை செய்திகள் வந்தன. ஆனால் அந்த திரும்ப பெறுதல் முடிவு சிறிது காலமே நீடித்தது. மீண்டும் எல்லையில் அத்துமீற சீன ராணுவத்தினர் வந்தனர்.
எல்லையில் வெப்பநிலை
அடுத்த 3 மாதங்களுக்கு இந்தியா- சீனா இடையே எதிர்ப்பு கடிதங்கள் பறிமாறிக் கொள்ளப்பட்டன. நாயக் சுபேதார் ஜங் பகதூர் தலைமையிலான கோர்க்காக்கள் களத்தில் அமர்த்தப்பட்டது இந்திய ராணுவ வரலாற்றில் மிகவும் முக்கியமானதாகும். அக்டோபர் மாதம் குளிர்காலம் தொடங்கியது. எல்லையில் 0 டிகிரிக்கு கீழ் வெப்பநிலை சென்றது.
நடைமுறைகள்
இதனால் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு கோர்க்கா படைகளை திரும்ப பெற்றார். பின்னர் மேஜர் எஸ் எஸ் ஹாசாப்னிஸ் தலைமையில் 5 ஜாட் படைகளை எல்லைக்கு அனுப்பினார். எம் 4 ஹெலிகாப்டர்கள் அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ரோந்து பணியில் ஈடுபட்டது. அடுத்த சில நாட்களில் இந்த நடைமுறைகள் முடிந்தன.
எச்சரிக்கை
அக்டோபர் 20-ஆம் தேதி 1962ஆம் ஆண்டு கால்வன் எல்லையில் அத்துமீறிய சீன படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 36 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். பின்ன்ர 1962-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வ போர் தொடங்கியது. மேஜர் ஹாசாப்னிஸ் சீன படையினரால் 7 மாதங்கள் சிறை பிடிக்கப்பட்டார். பின்னர் போர் முடிந்தது. மேஜர் ஹாசாப்னிஸின் மகன்தான் தற்போதைய ராணுவ துணை தளபதியாவார். இதுபோல் படைகளை திரும்ப பெறுவதும் திடீர் தாக்குதல் நடத்துவதும் சீனாவுக்கு கைவந்த கலை என்பதால்தான் இந்திய ராணுவம் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.