நடுவானில் யூ டர்ன் போட்டது.. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பரபரப்பு!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் நேற்று காஷ்மீரில் இருந்து டெல்லி திரும்பும் போது பரபரப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் நேற்று காஷ்மீரில் இருந்து டெல்லி திரும்பும் போது பரபரப்பு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அவர்கள் வந்த விமானம் தரையிறங்கும் போது பெரிய பிரச்சனை ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் நிலைமையை பார்வையிட நேற்று எதிர்கட்சித் தலைவர்கள் ஸ்ரீநகர் சென்றனர். காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி, கே சி வேணுகோபால், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெட்சூரி, திரிணாமுல் தலைவர் தினேஷ் திரிவேதி, திமுக சார்பாக திருச்சி சிவா உள்ளிட்ட 14க்கும் மேற்பட்ட தலைவர்கள் காஷ்மீர் சென்றனர்.
ஆனால் இவர்கள் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் எல்லோரையும் ராணுவம் நேற்று பாதியில் திருப்பி அனுப்பியது.
இந்த நிலையில் இவர்கள் ஸ்ரீநகரில் இருந்து டெல்லி திரும்பிய அந்த கோ ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான G8-149 விமானம் டெல்லியில் தரையிறங்கும் போது ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த விமானம் தரையிறங்க ரெடியாக விமான நிலையத்தை நோக்கி கீழே இறங்கி வந்தது. ஆனால் அப்போது, விமானத்தை தரையிறங்க வேண்டாம் என்று விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இங்கே ஓடுதளம் இல்லை அதனால் தரையிறக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர்.இதனால் துரிதமாக செயல்பட்ட விமானி விமானத்தை மீண்டும் வானத்தை நோக்கி திருப்பி அங்கேயே வட்டமடித்துள்ளார். கோ ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான G8-149 விமானம் தரையிறங்க வேண்டிய ஓடுதளத்தில் அப்போது வேறு ஒரு விமானம் இருந்துள்ளது.
அந்த விமானம், ராகுல் காந்தி சென்ற G8-149 விமானம் வருவதற்கு முன்பே புறப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் அதன் என்ஜினில் பறவை ஒன்று சிக்கி இருந்ததால் அதை நீக்குவதற்கு தாமதம் ஆகியுள்ளது. இதனால் G8-149 விமானம் இறங்குவதற்கு ஓடுதளம் இல்லாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால்தான் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சென்ற G8-149 மேலே சென்றுவிட்டு வட்டமடித்துவிட்டு சிறிது நேரம் கழித்து தரையிறங்கி உள்ளது. இதனால் யாருக்கும் எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இந்த சிக்கல் காரணமாக விமானத்தில் இருந்த சில பயணிகள் பெரிய அளவில் அச்சத்திற்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.