மோடி பதவி ஏற்பு விழா... 10,000 போலீசார் குவிப்பு... உச்சக்கட்ட பாதுகாப்பில் தலைநகர் டெல்லி!
Recommended Video
டெல்லி: தலைநகர் டெல்லியில் மோடி பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு பல் அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க இருக்கிறது. மீண்டும் பிரதமராக மோடி இன்று மாலை பதவி ஏற்க இருக்கிறார். அவருடன் 60 அமைச்சர்களும் பதவி ஏற்க இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனும், தேனி தொகுதி எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கும் மத்திய இணை அமைச்சர் பதவி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை 7 மணியளவில் குடியரசுத் தலைவர் மாளிகையில் மோடியின் பதவி ஏற்பு விழா நடக்கிறது. இந்த பதவி ஏற்பு விழாவால் குடியரசுத் தலைவர் மாளிகை விழாக்கோலம் பூண்டுள்ளது. பதவி ஏற்பு விழாவிற்கு மிக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் 6,500 பேர் பங்கேற்க இருக்கின்றனர். மாநில முதல்வர்கள், உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்கின்றனர்
தவிரவும், பல்வேறு நாட்டுத் தலைவர்கள், வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களும் மோடி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள டெல்லிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதையடுத்து, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல் அடுக்கு பாதுகாப்பு வளையத்தின் கீழ் டெல்லி வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 10,000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவசர நிலையை சமாளிக்க அதிவிரைவு பாதுகாப்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள ராஜபாதை, டீன் மூர்த்தி மார்க், கிருஷ்ண மேனன் மார்க், பண்டிட் பந்த் மார்க், தல்கட்டோரா ரோடு, குருத்வாரா ரகப் கஞ்ச் ரோடு, தியாகராஜ் மார்க், அக்பர் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் மாலை 4 முதல் 9 மணிவரை மூடப்பட உள்ளன. இந்த சாலைகளை பொதுமக்கள் தவிர்க்குமாறு டெல்லி போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.