கடந்த ஆண்டை ஒப்பிட்டால் நடப்பாண்டு முக்கிய அணைகளில் அதிக நீர் இருப்பு.. மத்திய அரசு தகவல்
டெல்லி: நாடு முழுவதும் வெளுத்து வாங்கி வரும் வெயிலுக்கு ஏராளமான மாநிலங்கள் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றன. இந்நிலையில் நாட்டிலுள்ள முக்கிய நீர்தேக்கங்களின் நிலை குறித்து மத்திய நீர் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய நீர் ஆணையமானது நதிகள் அபிவிருத்தி மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட நீர்வளங்களில் நாட்டின் முதன்மையான தொழில்நுட்ப அமைப்பாகும். இந்த அமைப்பு வாரா வாரம் வியாழக்கிழமைகளில, நாட்டிலுள்ள முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு மற்றும் சேமிப்பு குறித்த விரிவான செய்திகளை வெளியிடுகிறது.
நாட்டில் மொத்தம் 91 முக்கிய நீர்தேக்கங்கள் மத்திய நீர் ஆணையத்தால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ள மத்திய நீர் ஆணையம், 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒட்டுமொத்த சேமிப்பு நிலை, கடந்த ஆண்டு இதே நேரத்தில் இருந்த நிலையை காட்டிலும் சற்று கூடுதலாகவே உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
அதன்படி நாட்டில் உள்ள 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் அவற்றின் முழுக் கொள்ளளவில் 18 சதவீத அளவே நீர் இருப்பதாக புள்ளிவிவரத்துடன் தகவல் வெளியிட்டுள்ளது. 91 அணைகளின் மொத்த கொள்ளளவு 157.799 பிசிஎம் ஆகும். இதில் தற்போது அதாவது மொத்த நீர் இருப்பு 29.189 பில்லியன் கியூபிக் மீட்டராக உள்ளது.
இது கடந்த ஆண்டு இதே நேரத்தில் 28.013 பில்லியன் கியூபிக் மீட்டராக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. எனவே இதை ஒப்பிட்டு பார்த்தால் தற்போது நடப்பாண்டில் சற்று கூடுதலாகவே நீர் இருப்பு உள்ளது ஆறுதலுக்குரிய விஷயமாகும். ஆனால் இந்த நிலைமை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இல்லை. சில நீர்தேக்கங்களில் கடந்த ஆண்டை காட்டிலும் நீர் இருப்பு வெகுவாக சரிந்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த 4 நாட்களுக்கு முன் மத்திய நீர் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள நீர்த்தேக்கங்களில் கடந்த 10 ஆண்டு கால சராசரி அளவை விட கணிசமாக நீர் இருப்பு குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் இது வறட்சியை சமாளிக்க கூடிய அளவிற்கு உள்ள நீர் இருப்பு என்பதால், மோசமான நிலையில் இல்லை, சாதாரண நிலையே என கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் ஒருவார தாமதத்திற்கு பின்னர் கடந்த ஜூன் 8ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. வழக்கமாக ஜூன்-செப்டம்பர் பருவமழை காலத்தில் எதிர்பார்க்கும் அளவு அல்லது அதைவிட அதிகமாக மழை பெய்து வருவதால், ஒருவார கால தாமதம் என்பது மழையின் அளவை பாதிக்காது என்றே கருதப்படுகிறது.