பட்ஜெட் 2019: வருமான வரி உட்பட குறைக்கப்பட்ட தனி நபர் வரிகள்.. டாப் 6 புது அறிவிப்புகள் இவைதான்!
டெல்லி: மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அதிரடி வரி மாற்றங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.
அதில் முக்கியமான வரி மாற்ற தகவல்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம். இந்திய வரி விகித நடைமுறையில் இது முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும்.
தனி நபர் வருமான வரி மட்டுமின்றி, பொதுவாக மக்களுக்கு பயன்படும் பல்வேறு சலுகைகள் இதில் உள்ளன.
நிலையான கழிவு
நிலையான கழிவு என்பது இதுவரை 40 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அது 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் எத்தனை லட்சம் சம்பாதித்தாலும், அதிலிருந்து ஆவணங்களை காண்பிக்காமல் ஒரு 50 ஆயிரம் ரூபாயை ஒதுக்கி வைத்துவிடலாம்.
தனி நபர் வருமான வரி
தனி நபர் வருமான வரி சலுகை உச்சவரம்பு இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு ரூ.5 லட்சமாகியுள்ளது. ஒருவேளை உங்களது ஆண்டு வருமானம் 6.5 லட்சம் ஆக இருந்தால், நீங்கள் 80சி முதலீட்டு பிரிவில் முழு அளவில் அனைத்து வகை முதலீடுகளையும் செய்திருந்தால், 6.5 லட்சம் வருவாய் ஈட்டியவர்களும் ஒரு பைசா வருமான வரி செலுத்த தேவையிருக்காது.
இரண்டாவது வீடு
இரண்டாவது வீட்டுக்கு வரி விதிக்கும் நடைமுறை நீக்கப்பட்டு, ஒருவர் இரு வீடுகளை தனது சொந்த தேவைக்காக பயன்படுத்திக் கொண்டால், இனிமேல் வரி விதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு ஒருவர் இரு வீடுகளை வைத்திருந்தால் மற்றொரு வீடு வாடகைக்கு விடப்பட்ட வீடாக கருத்தில் கொள்ளப்பட்டு வந்தது.
மூலதன ஆதாய வரி
வீட்டை விற்பனை செய்யும்போது தற்போது விதிக்கப்பட்டு வந்த ஆதாய மூலதன வரி இரு வீடுகளுக்கு நீக்கப்பட்டுள்ளது. முன்பு இது ஒரு வீடு என்ற அளவில் இருந்தது. இரண்டு கோடி ரூபாய் அளவுக்குள் மதிப்பிலான வீடுகளுக்கு இவை பொருந்தும்.
வங்கிகள், தபால் நிலையங்கள்
வங்கிகள், தபால் நிலையங்கள், போன்றவற்றில் செய்துள்ள சேமிப்புத் திட்டங்கள் மூலமாக பெறப்படும் வட்டி வருவாய்க்கு முன்பு 10 ஆயிரம் வரை வரி விலக்கு தரப்பட்டது. அதை 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது மத்திய பட்ஜெட்.
வருமான வரி
வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில், வருமான வரி செலுத்துவோருக்கு அவர்களது ரீஃபண்ட் (refund) தொகை 24 மணி நேரத்தில் திரும்ப கிடைக்க வழி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.