ஆட்சியை காப்பாற்ற காங்கிரஸ் போடும் பிளான்! சொந்த கட்சி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்! இமாச்சலில் பரபர
டெல்லி: இமாச்சல பிரதேசத்தில் திடீரென அரசியல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து இமாச்சல பிரதேச சபாநாயகர் அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் ஆளும் இமாச்சல பிரதேசத்தில் கடந்த வாரம் மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டது. அங்கே காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியில் இருந்த போதிலும், திடீர் குழப்பம் ஏற்பட்டது.

பெரும்பான்மை இருந்த போதிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததால் கடந்த வாரம் நடந்த ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்தார். இது அம்மாநில காங்கிரஸுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது.
இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட பாஜக, காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர உள்ளதாக அறிவித்தது. இதற்கிடையே நிலைமையைச் சமாளிக்க ராஜ்யசபா தேர்தலில் பாஜகவுக்கு மாற்றி வாக்களித்த இமாச்சல பிரதேசத்தைச் சேர்ந்த 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அம்மாநில சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இமாசல பிரதேசத்தில் ராஜ்யசபா தேர்தல் நடக்கும் முன்பு இவர்கள் 6 பேரும் பாஜக ஆளும் ஹரியானாவில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து நேரடியாக அவர்கள் சட்டசபைக்கு வந்து வாக்களித்தனர். அப்போது அவர்களின் துணிச்சலைப் பாராட்டுவதாகக் கூறி பாஜக எம்எல்ஏக்கள் கைதட்டி வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக அம்மாநில சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அதன்படி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜிந்தர் ராணா, சுதிர் ஷர்மா, இந்தர் தத் லகன்பால், தேவிந்தர் குமார் பூடூ, ரவி தாக்கூர் மற்றும் சேதன்யா சர்மா ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.. அம்மாநில சபாநாயகர் "காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிட்ட ஆறு எம்.எல்.ஏ.க்கள், கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் விதிகளை மீறியுள்ளனர். இதையடுத்து அந்த 6 பேரும் உடனடியாக இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்" என்று அறிவித்தார்.
நேற்றைய தினம் தான் அவை விதிகளை மீறியதாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள 15 பாஜக எம்எல்ஏக்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்த நிலையில், இன்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தாலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் இருப்பதை உறுதி செய்யவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications