இரண்டு மடங்கு வேகமாக உருகும்... இமயமலை பனிப்பாறைகள்... பேரபாயம் ஏற்பட வாய்ப்பு
டெல்லி: இமயமலையிலுள்ள பனிப்பாறைகள் முன்பைவிட இரண்டு மடங்கு வேகமாக உருகுவதால் பேரபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை திடீரென்று சரிந்து விழுந்ததில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் உயிரிழந்த ஒன்பது பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலையிலுள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகுவதே இதுபோன்ற வெள்ளத்திற்குக் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு
இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆய்வில் இமயமலையிலுள்ள பனிப்பாறைகள் முன்பைவிட இரண்டு மடங்கு வேகமாக உருகுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளாக உள்ள சாட்டிலைட் புகைப்படங்களைக் கொண்டு இந்தியா, சீனா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளில் இருக்கும் பனிப்பாறைகளை ஆய்வு செய்தனர். இதற்காக 2000 கிலோமீட்டர் நீளத்திற்கு உள்ள 650 பனிப்பாறைகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
வேகம் இரட்டிப்பு
1975 முதல் 2000ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2000 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சராசரியாக ஒரு டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துள்ளது. 1975 முதல் 2000ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பனிப்பாறைகள் ஆண்டுக்கு 0.25 மீட்டர் உருகியுள்ளது. ஆனால், 2000 முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பனிப்பாறைகள் ஆண்டுக்கு 0.50 மீட்டர் என்ற வேகத்தில் உருகியுள்ளது.
அதிக பனிப்பாறைகளை இழந்துள்ளோம்
இது குறித்து அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் ஜோசுவா மவுரர் கூறுகையில், "இந்த கால இடைவெளியில் இமயமலைப் பனிப்பாறைகள் எவ்வளவு வேகமாக உருகியுள்ளது என்பதை இதைவிடத் தெளிவாகக் காட்ட முடியாது, பருவநிலை மாற்றம் என்பது கடந்த சில காலமாகவே பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதனால் கடந்த 40 ஆண்டுகளில் மட்டும் அதிகளவில் பனிப்பாறைகளை நாம் இழந்துள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
பேராபத்து ஏற்படும்
ஆசிய நாடுகளில் கடந்த சில ஆண்டுகளாகவே வெளியாகும் கரியமில வாயுவின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் பனிப்பாறைகள் உருகுவது வேகமெடுத்துள்ளது. இமயமலை பனிப்பாறைகள் ஐரோப்பாவிலுள்ள ஆல்ப்ஸ் மலை பனிப்பாறைகளுடன் ஒப்பிடுகளையும குறைந்த வேகத்திலேயே உருகுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும், இது தொடர்ந்தால், வரும் காலங்களில் திடீர் வெள்ளம், கடல் நீர் மட்டம் அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை நாம் எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.