இந்து மதம் என்றால் பாஜக என்று அர்த்தம் கிடையாது.. ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் பரபர கருத்து!
இந்து மதம் என்றால் பாஜக என்று அர்த்தம் கிடையாது, பாஜகவை எதிர்ப்பது இந்துக்களை எதிர்ப்பதற்கு இணையாகாது, என்று ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்து மதம் என்றால் பாஜக என்று அர்த்தம் கிடையாது, பாஜகவை எதிர்ப்பது இந்துக்களை எதிர்ப்பதற்கு இணையாகாது, என்று ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்தே மிகவும் அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் முத்தலாக் நடைமுறைக்கு எதிராக சட்டம், காஷ்மீரை இரண்டாக பிரித்தது என்று வேகமாக செயல்பட்டு வருகிறது.
அதன்பின் சிஏஏ சட்டம் கொண்டு வந்தது. இதனால் பாஜகவின் இந்து ராஷ்டிரா கனவு விரைவில் நிறைவேறும் என்று பாஜகவினர் பலரும் கூறி வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்புதான் இதற்கு பின் இருக்கிறது. ஆர்எஸ்எஸ்தான் பாஜகவின் மூளை என்றும் கூறப்படுகிறது.
என்ன சொன்னார்
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்து மதம் என்றால் பாஜக என்று அர்த்தம் கிடையாது. பாஜகவை எதிர்ப்பது இந்துக்களை எதிர்ப்பதற்கு இணையாகாது. இரண்டும் ஒன்று கிடையாது. பாஜகவை எதிர்த்தால் இந்துக்களை எதிர்ப்பதாக சிலர் கூறுகிறார்கள். அது முற்றிலும் தவறு.
மக்கள் எப்படி
மக்கள் பாஜகவிற்கு எதிராக போராடினால் அதை இந்துக்களுக்கு எதிரான போராட்டம் என்று திரிக்க கூடாது. இரண்டும் வேறு வேறு வகையிலான போராட்டங்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசியலையும் மதத்தையும் ஒன்றாக வைத்து பார்க்க கூடாது. சிஏஏவை மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இந்திய அரசியலமைப்பு அதைத்தான் சொல்கிறது.
மத்திய அரசு
மாநில அரசு சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றாமல் இருக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடம் கிடையாது. இதனால் கேரளா போன்ற மாநில அரசுகள் மத்திய அரசின் இந்த சட்டத்தை பின்பற்ற வேண்டும். இந்தியாவில் பணியாற்ற விரும்பும் மக்கள், இந்து மதத்திற்கு உழைக்க வேண்டும். இந்து மதம் முன்னேற வேண்டும் என்று உழைக்க வேண்டும். அதுதான் உண்மையான உழைப்பு.
இந்தியா எப்படி
இந்தியா சூப்பர் பவர் நாடாக வேண்டும் என்பது முக்கியம் இல்லை. இந்தியா நல்ல நாடாக மாற வேண்டும் என்பதே முக்கியம். இந்துக்கள் இல்லாமல் இந்தியா இல்லை. இந்து மதம் இல்லாமல் இந்தியா இல்லை. மக்கள் இதை மனதில் கொண்டு, அதற்கு ஏற்றபடி பணியாற்ற வேண்டும். என்று ஆர்எஸ்எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார்.