அயோத்தி தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்கிறது இந்து மகாசபை
டெல்லி: அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக இந்து மகாசபையின் சதுர்வேதி தலைமையிலான பிரிவு தெரிவித்துள்ளது.
அயோத்தி நில வழக்கில் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான பெஞ்ச் கடந்த மாதம் 9-ந் தேதி தீர்ப்பளித்தது. சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்; முஸ்லிம்களுக்கு வேறு ஒரு இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும் என அத்தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
மேலும் 1992-ல் பாபர் மசூதியை இடித்தது சட்டவிரோதம் என்றும் உச்சநீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்திருந்தது. இத்தீர்ப்பை அனைத்து தரப்பும் தொடக்கத்தில் வரவேற்றன.
ஜாமியத் உலமா சீராய்வு மனு
இந்நிலையில் ஜாமியத் உலமா இ ஹிந்த் என்ற அமைப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மீது சீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்து மகாசபையின் சதுர்வேதி தலைமையிலான பிரிவும் தற்போது சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளது.
இந்து மகாசபையும் அப்பீல்
இந்து மகாசபை அமைப்பானது சுவாமி சக்ரபாணி மற்றும் சிஷிர் சதுர்வேதி ஆகியோர் தலைமையில் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. சதுர்வேதி தலைமையிலான பிரிவின் வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் சீராய்வு மனு தொடர்பாக தி பிரிண்ட் ஊடகத்துக்கு அளித்த பேட்டி:
5 ஏக்கர் தர எதிர்ப்பு
சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பதுதான் இந்த வழக்கு. இதில் இந்துக்களுக்குதான் அந்த நிலம் சொந்தம் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆகையால் முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் வழங்க தேவையில்லை என சீராய்வு மனுவில் குறிப்பிட உள்ளோம்.
வாசகத்தை நீக்க கோரிக்கை
அடுத்ததாக, 1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை சட்டவிரோதம் என உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கூறியுள்ளது. லக்னோ நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தின் இத்தீர்ப்பு அந்த வழக்கின் விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால் அதனை நீக்க வேண்டும். இவ்வாறு விஷ்ணு சங்கர் ஜெயின் கூறியுள்ளார்.