டெல்லி.. காயமடைந்த 400 போலீசார்.. மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்த அமித் ஷா
டெல்லி: டெல்லியில் குடியரசு தினம் அன்று நடைபெற்ற வன்முறையில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறையினரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.
டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் ஆங்காங்கு சில பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 400 போலீசார் காயமடைந்துள்ளதாக காவல் துறை தெரிவிக்கிறது.
அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சுஷ்ருதாஅவசர சிகிச்சை மையம் மற்றும் தீரத் ராம் மருத்துவமனை ஆகிய இரண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் காவல்துறையினரை அமித்ஷா இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, டெல்லி போலீஸ் கமிஷனர் ஸ்ரீவத்சவா ஆகியோர் உடன் இருந்தனர்.
அமித்ஷா பின்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், டெல்லியில் காயமடைந்த காவல்துறையினரை சந்தித்து நலம் விசாரித்தேன். அவர்களின் வீரத்தை பார்த்து பெருமை அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்து டெல்லியில் நிலவரம் தற்போது எப்படி இருக்கிறது என்பது பற்றி அவர் கேட்டறிந்தார்.