தீவிரமான டெல்லி போராட்டம்.. உயர்அதிகாரிகளை சந்தித்து நிலைமையை கேட்டறிந்த அமித் ஷா
டெல்லி: டெல்லி விவசாயிகள் போராட்டம் மிகவும் தீவிரமாக மாறிய நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை நடத்தினார்.
டெல்லியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்லாயிரம் பேர் டிராக்டர்களுடன் இன்று பேரணி நடத்தினர். டெல்லியின் வெளிவட்ட சாலைகளான சிங்கு, திக்ரி, காஜிபூர், பல்வால், ஷாஜகான்பூர் ஆகிய 5 எல்லைகளில் இருந்து டிராக்டர்கள் பேரணி நடத்த விவசாயிகளுக்கு டெல்லி போலீசார் அனுமதி கொடுத்தனர். 100 கிமீ தூரத்திற்கு ஐந்து வழிகளிலும் நடத்தலாம் என்று விவசாயிகளுக்கு போலீசார் அனுமதி கொடுத்திருந்தனர்.
அதன்படி பேரணி நடந்த நிலையில், ஹரியானாவில் இருந்து டெல்லிக்குள் நுழையும் எல்லையான சிங்குவில் அனுமதிக்கப்பட்ட பாதையில் இருந்து மாற்றுப்பாதையில் விவசாயிகள் சென்றனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சில விவசாயிகள் தடுப்புகளை உடைத்து முன்னேறினர்.இதையடுதது அவர்களை தடுக்க. கண்ணீர் புகை குண்டு, தடியடி நடத்தினர். இதேபோல் தடுப்புகளை உடைத்து பரிதாபாத் எல்லை பகுதிக்குள் சென்ற விவசாயிகள் மீது காவல்துறையினர் தாக்குதல். நடத்தினர். இதனால் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்ட நிலையில் டிராக்டர்களுடன் பலர் செங்கோட்டை நோக்கி முன்னேறினர். இறுதியில் செங்கோட்டையில் விவசாயிகள் கொடியை ஏற்றினர்.
இதனால் டெல்லியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்தி நிலைமையை போலீசார் கட்டுக்குள் கொண்டு வர கடும் முயற்சி எடுத்து வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டங்களுக்கு மத்தியில் டெல்லியின் பாதுகாப்பைப் பற்றி விவாதிப்பதற்கும் மறுஆய்வு செய்வதற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உயர் பாதுகாப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகளை சந்தித்தார். உள்துறை செயலாளர் அஜய் பல்லா, டெல்லி போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா ஆகியோர் உயர் மட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று நடந்த மோதல்கள் குறித்து அமித் ஷாவுக்கு விளக்கமளிக்கப்பட்டது, ஆயிரக்கணக்கான விவசாயிகள் எல்லைகளில் தடுப்புகளை மீறி, ஒப்புக்கொண்ட பாதைகளில் இருந்து விலகி டெல்லி நகரின் மையப்பகுதிக்கு வந்தது குறித்து விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையே டெல்லியில் விவசாயிகள் பேரணியில் வன்முறை ஏற்பட்டதையடுத்து நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடியும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.