இந்திய பயணிகளுக்கு கொரோனா...2வது முறையாக ஏர் இந்தியா விமானத்துக்கு ஹாங்காங் தடை!!
டெல்லி: இந்தியாவில் இருந்து ஹாங்காங் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருந்ததையடுத்து, ஏர் இந்தியா விமானத்துக்கு அந்த நாடு 15 நாட்களுக்கு தடை விதித்துள்ளது. இதன்படி வரும் அக்டோபர் 3ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானம் ஹாங்காங் செல்லாது.
முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதம் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானங்களுக்கும் ஹாங்காங்க் அரசு தடை விதித்து இருந்தது. தற்போது இரண்டாவது முறையாக இந்த தடையை விதித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 87 ஆயிரம் பேருக்கு புதிதாக நோய் தொற்று!
இந்திய பயணிகள்
இதுகுறித்து சீனா மார்னிங் போஸ்டில் வெளியாகி இருக்கும் செய்தியில், ''இந்தியாவில் இருந்து ஹாங்காங் வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டின் அவசர சட்டப்படி 5 கொரோனா நபர்கள் ஒரு விமானத்தில் வந்து இறங்கினால் அல்லது மூன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வந்து இறங்கினால், எந்த நாட்டில் இருந்து விமானம் வருகிறதோ அந்த நாட்டு விமானத்தின் சேவை தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏர் இந்தியா விமான சேவை தடை செய்யப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்
ஹாங்காங்கில் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 23 பேரில் மூன்றில் ஒரு பங்கினருக்கு இந்தியாவில் இருந்து வந்த பயணிகளால் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று ஹாங்காங் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, ஏர் இந்தியா விமானங்கள் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ஹாங்காங் வருவதற்கு அந்தநாட்டு அரசு தடை விதித்துள்ளது.
தடை வாபஸ்
சமீபத்தில் துபாயும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு இதே குற்றச்சாட்டின் கீழ் தடை விதித்து இருந்தது. வரும் அக்டோபர் 2ஆம் தேதி வரை தடை நீடிக்கப்படும் என்று அறிவித்து இருந்த நிலையில், உடனடியாக தடை உத்தரவை வாபஸ் பெற்றது. தற்போது துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை தொடர்ந்து நடந்து வருகிறது.
கொரோனா தொற்று
தற்போது இந்தியாவில்தான் அதிகளவில் தொற்று உள்ளது. கொரோனா தொற்றில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது. 54,85,612 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 10,04,274 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுவரைக்கும் 87,909 பேர் உயிரிழந்துள்ளனர்.