டிஆர்டிஓவின் லேசர் செக்யூரிட்டி.. பிரதமர் மோடிக்கு அருகே இருந்த கருவியை கவனித்தீர்களா? செம பின்னணி
டெல்லி: பிரதமர் மோடி இன்று செங்கோட்டையில் உரையாற்றிய போது அவருக்கு அருகே சில மீட்டர்கள் தூரத்தில் பெரிய ராட்சச கருப்பு நிற கருவி ஒன்று காணப்பட்டது.
நாட்டின் 74வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டது. கொரோனா பரவலுக்கு இடையே கடும் கட்டுப்பாடுகளுடன் இன்று கூட்டம் நடைபெற்றது. நாடு முழுக்க மாநில முதல்வர்கள் இன்று கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினார்கள்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசிய கொடியேற்றி வைத்தார். கொரோனா பாதிப்பு, எல்லை பிரச்சனை என்று பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி இன்று தனது உரையில் குறிப்பிட்டார்.
காஷ்மீரில் விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்படும்.. சுதந்திர தின உரையில் உறுதியளித்த மோடி
கருவி
பிரதமர் மோடி இன்று செங்கோட்டையில் உரையாற்றிய போது அவருக்கு அருகே சில மீட்டர்கள் தூரத்தில் பெரிய ராட்சச கருப்பு நிற கருவி ஒன்று காணப்பட்டது. இந்த கருவி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. உள்ளே இதில் பெரிய கேமரா இருந்தது. அவ்வப்போது இந்த கருவி இடது பக்கமும் வலது பக்கமும் திரும்பிக் கொண்டு இருந்தது. அதேபோல் இதில் இரண்டு பெரிய ஆன்டெனாக்கள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
பலரும் கேள்வி
இந்த கருவி என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர். இது ஒரு லேசர் தாக்குதல் கருவி ஆகும். இது முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. டிஆர்டிஓ மூலம் இந்த கருவி உருவாக்கப்பட்டது. மூன்று வருட ஆராய்ச்சிக்கு பின் இந்த கருவி உருவாக்கப்பட்டது. முழுக்க முழுக்க நவீன லேசர் தொழில்நுட்பத்துடன் இந்த கருவி உருவாக்கப்பட்டது.
என்ன செய்யும்
இந்த கருவி மேலே பறக்கும் டிரோன் விமானங்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது. அதுவும் சத்தமே இல்லாமல் இது டிரோன்களை சுட்டு வீழ்த்தும். வானத்தில் ஒரு டிரோன் பறந்தால் சென்சார்கள் மூலம் இது அந்த டிரோன்களை கண்டுபிடிக்கும். அதன்பின் அதை நொடியில் புகைப்படம் எடுத்து பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும்.
சுடும்
புகைப்படம் எடுத்த அடுத்த நொடி, அந்த டிரோனை இந்த கருவி சுட்டு வீழ்த்தும். லேசர் கதிர்களை பாய்ச்சி, சத்தமே இல்லாமல் சுட்டு வீழ்த்தும். அதேபோல் இதில் இருந்து வரும் சிக்னல் ஒன்று டிரோன் பறப்பதை தடுக்கும். அதாவது ரிமோட் கண்ட்ரோல் மூலம் டிரோன் செயல்படாத வகையில் இந்த கருவி ஒரு ஜாம்மார் போல செயல்படும்.
மீறி வந்தால்
3 கிமீ வரை இதன் ஜாம்மார் தொழில்நுட்பம் செயல்படும். அதையும் மீறி ஏதாவது டிரோன் உள்ளே வந்தால், அதை குறி வைத்து இந்த கருவி தாக்கி அழிக்கும். 1.2 கிமீ தூரம் வரை இந்த லேசர் கதிர்கள் சென்று தாக்கும் திறன் கொண்டது. இதைத்தான் இன்று பிரதமர் மோடிக்கு அருகில் பாதுகாப்பிற்காக வைத்து இருந்தனர். அமெரிக்கா, வடகொரியா உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே இதுபோன்ற கருவிகள் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.