சந்திரயான் 2.. தோல்வியை எப்படி கையாள்வது?.. அனுபவம் மூலம் 2013-இல் அப்துல்கலாம் கூறியது இதுதான்!
டெல்லி: 1979-ஆம் ஆண்டு எஸ்எல்வி-3 என்ற செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பிய போது வங்கக் கடலில் போய் விழுந்த தோல்வியை கையாண்டது எப்படி என்பது குறித்து திட்டத்தின் தலைவராக இருந்த அப்துல் கலாம் ஒரு விழாவில் விளக்கியது தற்போது வைரலாகி வருகிறது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்காக இஸ்ரோ அனுப்பிய நிலையில் அதிலிருந்து சிக்னல் துண்டிக்கப்பட்டதால் தரையிறக்கும் திட்டம் தற்காலிகமாக தோல்வி அடைந்தது.
திட்டமிட்டபடி லேண்டர் தரையிறங்காததால் கண்ணீர் வடித்த இஸ்ரோ தலைவர் கே சிவனை கட்டி அணைத்து பிரதமர் மோடி தேற்றினார். மேலும் இஸ்ரோ விஞ்ஞானிகள் யாரும் துவள வேண்டாம் என்று கேட்டு கொண்ட மோடி தற்போது கற்று கொண்ட அனுபவத்திற்கு பிறகு புதிய விடியலும் சிறப்பான எதிர்காலமும் நமக்கு காத்திருக்கிறது என மோடி பேசினார்.
விக்ரம் லேண்டர் எந்த நிலையில் இருக்கிறது? ரோவர் எப்படி இருக்கிறது.. விஞ்ஞானிகள் கருத்து
செயற்கைகோள்
இது போல் திட்டமிட்டபடி விண்கலமோ செயற்கைகோளோ செல்லாதது இது முதல் முறை அல்ல. 1979-ஆம் ஆண்டு எஸ்எல்வி-3 என்ற செயற்கைகோள் முதல் முறையாக இஸ்ரோ சார்பில் விண்ணில் ஏவப்பட முயற்சித்த போது அது வெடித்து சிதறி வங்கக் கடலில் விழுந்த சம்பவத்தை திட்ட இயக்குநராக இருந்த அப்துல் கலாம் எப்படி கையாண்டார் என்பது குறித்து அவரே கடந்த 2013-ஆம் ஆண்டு விவரித்துள்ளார்.
ஊழியர்கள்
இதுகுறித்து ஒரு விழாவில் கலாம் விவரிக்கையில், 1979-ஆம் ஆண்டு நான் திட்ட இயக்குநராக இருந்தேன். இஸ்ரோ தலைவராக சதீஷ் தவான் இருந்தார். சுற்று வட்ட பாதையில் செயற்கைகோளை நிலை நிறுத்துவதாகும். இதற்காக 10 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றியிருந்தனர்.
கம்ப்யூட்டர் சிக்னல்
எல்லாம் முடிந்து கவுன்ட்டவுன் கொடுத்துக் கொண்டிருந்த போது நான் ஸ்ரீஹரிகோட்டாவை அடைந்தேன். அப்போது முதல் செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான கவுன்ட்டவுன் 40 வினாடிகள் இருந்தது. அப்போது செயற்கைகோளை செலுத்த வேண்டாம் என கம்ப்யூட்டரில் சிக்னல் வந்தது.
சிக்கல்
நான்தானே திட்ட இயக்குநர். அதனால் நான் ஏதாவது முடிவெடுக்க வேண்டும். எனக்கு கீழ் 6 அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் இருந்தனர். அவர்கள் கம்ப்யூட்டர் டேட்டாபேஸை சோதனை செய்தனர். ஏதோ படங்கள் வந்ததை அவர்கள் பார்த்துவிட்டு கன்ட்ரோலில் ஏதோ சிக்கல் இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
வங்கக் கடலில்
இதையடுத்து நான் கம்ப்யூட்டர் சிக்னலை ஓரங்கட்டிவிட்டு, செயற்கைகோளை விண்ணில் செலுத்தினேன். ஒரு செயற்கைகோளை விண்ணில் ஏவ 4 நிலைகள் உள்ளன. அதில் முதல் நிலை நன்றாக போனது, இரண்டாம் நிலையில் கோளாறு ஏற்பட்டது. சுற்று வட்டபாதையில் கணினியை நிறுத்துவதற்கு பதிலாக வங்கக் கடலில் செயற்கைகோள் விழுந்துவிட்டது.
சதீஷ் தவான்
முதல்முறையாக நான் இந்த தோல்வியை சந்தித்தேன். இதை எப்படி கையாள்வது என்பது குறித்து சிந்தித்தேன். கணினி எச்சரிக்கை விடுத்த பிறகும் செயற்கைகோளை விண்ணில் செலுத்த முயன்றதற்கு காரணம் நான் மட்டும்தான். ஆனால் செயற்கைகோள் ஏவும் நிகழ்ச்சி தோல்வி அடைந்தது குறித்து சதீஷ் தவான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
வெற்றி
அப்போது இந்த திட்டம் தோல்வி அடைந்ததற்கு முழு காரணமும் தான்தான் என நான் செய்த தவறுக்கான பழியை அவர் மீது சுமர்த்திக் கொண்டார். இதனால் விமர்சனங்கள் எழும் என தெரிந்தே சதீஷ் தவான் தன் மீது பழியை ஏற்றுக் கொண்டார். எங்களுடைய விஞ்ஞானிகள், தொழில்நுட்ப பிரிவினருக்கு நான் முழு ஆதரவு அளிக்கவுள்ளேன். அப்போதுதான் அடுத்த முறை அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார் தவான்.
பாடம் கற்றேன்
பின்னர் 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18-ஆம் தேதி எஸ்எல்வி வெற்றிகரமாக ரோகிணி என்ற செயற்கைகோளை விண்ணில் ஏவியது. இதையடுத்து செய்தியாளர்களை என்னை சந்திக்குமாறு தவான் கூறிவிட்டார். அதிலிருந்து நான் ஒரு பாடத்தை கற்றுக் கொண்டேன். அதாவது தோல்வி வரும் போது நிறுவனத்தின் தலைவர் அதை ஏற்க வேண்டும் என்பதையும் வெற்றி பெறும் பட்சத்தில் அதை பணியாற்றிய குழுவுக்கு அளித்து விட வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். இதை நான் புதிதாக புத்தகத்தை படித்து தெரிந்து கொள்ளவில்லை. எனது அனுபவத்தின் மூலமே கற்றுக் கொண்டேன் என கலாம் தெரிவித்தார். எனவே சந்திரயான் 2 விவகாரத்தில் தோல்வியை கண்டு துவளக் கூடாது என்பதற்காக கலாமின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.