காட்டு விலங்குகளுக்கு குளிரடிச்சா என்ன செய்யும் தெரியுமா.. யோசிச்சிருக்கீங்களா?
டெல்லி: குளிர்காலத்தில் நடுக்கம் எல்லோருக்கும் சகஜம். ரொம்பக் குளிரடித்தால் நாம் ஸ்வெட்டர், மங்கி கேப் என்று தாவி விடுகிறோம்.. ஆனால் காட்டு விலங்குகள் என்ன செய்யும்.
இந்தியாவில் உள்ள உயிரியல் பூங்காக்களில் நடுங்கும் குளிருக்கு இதமாக விலங்குகள் தங்களது இடத்தில் பாதுகாப்பாக இருக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இது வழக்கமாக பல்வேறு நாடுகளிலும் நடப்பதுதான். இதேபோல கோடை காலத்திலும் சிறப்பு ஏற்பாடுகளை செய்து விலங்குகளைக் காப்பார்கள்.
வீட்டில் நாம் வளர்க்கும் நாய்க்கு பட்டுச் சட்டை கூட போட்டு அழகு பார்க்கி்றோம். அவை குளிரில் நடுங்கினால், கம்பளி போர்த்தி பாதுக்காக்கிறோம். அப்படி இருக்கும்போது, உயிரியல் பூங்காக்களில் வசிக்கும் விலங்குகள், பறவைகள் வெளியே வாட்டி வதைக்கும் குளிரில் என்ன செய்யும்? அவைகளுக்கு மட்டும் குளிராதா என்ன? அதனால்தான் இந்தியா முழுக்க பல உயிரியல் பூங்காக்களில் விலங்குகள், பறவைகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளார்களாம். பார்க்கலாமா, எப்படி எல்லாம் விலங்குகள், பறவைகளை நடுங்கும் குளிரில் இருந்து பாதுகாக்கிறார்கள் என்று பார்க்கலாமா!
குளிர்ச்சி, வெப்பம் என்று நமக்கு உண்டான இயற்கையின் தாக்குதல்கள் அனைத்து உயிரினங்களுக்கும்தான் இருக்கிறது. வெளியே பெய்யும் கடுமையான பனியில், என்னதான் குகைக்குள், கூண்டுக்குள் என்று இவைகள் இருந்தாலும் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது. நாம் கட்டிக் காத்து வரும் உயிரியல் பூங்காக்களில் இப்படியான நிலையில் விலங்குகள், பறவைகள் இருக்கையில் அவைகளைப் பாதுகாப்பில் வைப்பது நமது கடமைதானே.
ஹீட்டர் கதகதப்பு
விலங்குகள் சூடான நிலையில் இருக்க உதவுவதற்காக, அறை ஹீட்டர்கள் மற்றும் வெப்பமூட்டும் கருவிகள் உயிரியல் முகாம்களில் பொருத்தப்பட்டு, ஜன்னல்கள் பாலித்தீன் தாளைக் கொண்டு வெப்பம் மற்றும் குளிர் காற்றுகளை தக்கவைத்துக்கொள்ளும்படி மூடப்படுகின்றன. மேலும் மரம் மற்றும் மூங்கிலில் செய்யப்பட்ட தற்காலிக அறைகளும் கூட செய்து தரப்படுகின்றன.
கோதுமை புல் படுக்கை
நெல் வைக்கோல் மற்றும் கோதுமை புல் படுக்கை ஆகியவற்றை விலங்குகளின் உறைவிடங்களில் வைத்து அதில் படுக்க வகை செய்கின்றனர். வைக்கோல் மற்றும் புல் ஆகியவற்றால் ஆன கதகதப்பான கூண்டுகள் பறவைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. கூண்டுகள் ஃபைபர் துணி, சணல் பாய்கள் மற்றும் பாலிதீன் தாள்கள் ஆகியவற்றால் மூடப்பட்டுள்ளன.
பாம்புக்கும் ஹீட்டர்
பாம்புகளுக்கு, எண்ணெய் நிரப்பப்பட்ட ஹீட்டர்கள் வெப்பமூட்டும் இலைச்சருகுகள், போர்வைகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பாம்புகளும் கடும் குளிரின் தாக்கத்திலிருந்து தப்பி உயிர் பிழைக்க வாய்ப்பு கிடைக்கிறது.
வன விலங்குகள் என்ன செய்யும்
இது உயிரியல் காப்பகங்களில். வனங்களில் இந்த வசதி கிடையாதே.. அதற்கு விலங்குகளே இயற்கையான தடுப்பு நடவடிக்கைளில் ஈடுபடுகின்றன. அதாவது குளிர்காலத்தில் விலங்குகள் அதிகம் சாப்பிடுமாம். புலிகள், சிங்கங்கள் மற்றும் சிறுத்தைப்புலிகள் போன்றை குளிர்காலத்தில் கூடுதலாக இறைச்சியை உண்ணும். உதாரணமாக, கோடை காலத்தில் 8 முதல் 10 கிலோகிராம் இறைச்சியை தினமும் சாப்பிடுமானால், குளிர்காலத்தில் குறைந்தது 12 கிலோ சாப்பிடுமாம்.
யானைகள் கரும்பு
யானைகளைப் பொறுத்தவரை கரும்பு, வெல்லம் மற்றும் பப்பாளி இலைகளை அதிகம் சாப்பிடுமாம். குரங்குகள், சிங்க வால் குரங்குகள் மற்றும் கிப்பன்கள் பால், பழங்கள் அதிகம் சாப்பிடுகின்றன.
உயிர் காக்கும் கொழுப்பு
விலங்குகள் கோடைகாலத்தில் கொழுப்புச் சேமிப்பை வைத்திருக்கும்.. இந்த கொழுப்பு உடலின் வெப்பநிலை மற்றும் இதயத் துடிப்பு மற்றும் அவைகளின் ஆற்றலைக் காப்பாற்ற உதவுகிறது. மேலும் குளிர் காலத்தில் விலங்குகளின் உரோம வளர்ச்சி அதிகமாக இருக்குமாம். அதுவும் கிட்டத்தட்ட ஸ்வெட்டர் போல செயல்பட்டு விலங்குகளை குளிரிலிருந்து காக்கிறதாம்.