காங்கிரஸ் தலைவர் பதவி.. முதல் சாய்ஸ் அசோக் கெலாட்! காந்தி குடும்பத்தை “இம்ப்ரஸ்” செய்தது எப்படி?
டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற இருக்கும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை காந்தி குடும்பம் அதிகம் நம்புவதற்கான காரணம் என்னவென்று பார்ப்போம்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை.
காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். ஆனால், அடுத்தடுத்த தேர்தல்களில் படுதோல்வியடைந்ததால் அக்கட்சிக்குள் பூசல்கள் வெடித்தன.
அசோக் கெலாட் vs சசி தரூர்.. சூடு பிடித்த காங்கிரஸ் தலைவர் தேர்தல்! யாருக்கு அதிக வாய்ப்பு? பின்னணி!
காந்தி குடும்பம்
காந்தி குடும்பம் அல்லாத தலைமை வேண்டும் என்று கோரிக்கைகள் கட்சிக்குள் எழத் தொடங்கின. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக பதவி வகித்து வரும் சோனியா காந்தியின் உடல்நிலை முன்பை போல் கட்சிப் பணியாற்ற ஒத்துழைப்பதில்லை. வயது மூப்பு மற்றும் அவர் செய்துகொண்ட அறுவைச் சிகிச்சை காரணமாகவும் அடிக்கடி ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மீண்டும் ராகுல் காந்தி கட்சித் தலைவராக வேண்டும் என்று தலைவர்கள் பலர் வலியுறுத்தியும் அவர் ஏற்கவில்லை.
காங்கிரஸ் செயற்குழு
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் நடைபெறும் தேதியை முடிவு செய்வதற்காக அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த ஆகஸ்டு 28 ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக கூடியது. அதில், அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வேட்புமனுத் தாக்கல்
இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 தேதியான இன்று தொடங்கி வரும் 30 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை புதிய தலைவராக்குவதே காந்தி குடும்பத்தின் திட்டம் என்று கூறப்படுகிறது. அதேபோல் காங்கிரஸ் எம்பி சசி தரூரும் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் முனைப்பில் இருக்கிறார்.
பேச்சுவார்த்தை
அசோக் கெலாட் மற்றும் சசி தரூர் ஆகியோர் சோனியா காந்தியை சந்தித்தும் பேசினர். இந்த நிலையில் நேற்று ராகுல் காந்தியை தலைவர் தேர்தலில் போட்டியிட வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கு அவர் உடன்படவில்லை. இதனை தொடர்ந்து அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்து உள்ளார்.
அசோக் கெலாட்
இதில் அதிகளவில் உச்சரிக்கப்படுவது அசோக் கெலாட் பெயர். உட்கட்சி பூசல்கள், பாஜகவின் ஆபரேசன் தாமரை, கட்சி தாவல்களால் காங்கிரஸ் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. கர்நாடகா, மத்திய பிரதேசத்தில் ஆபரேசன் தாமரையை செயல்படுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தங்கள் வசப்படுத்தி ஆட்சியை பிடித்தது பாஜக. அதே பார்முலாவை ராஜஸ்தானிலும் பயன்படுத்தியது.
ஆபரேசன் தாமரை
சில நாட்கள் அரசியல் குழப்பங்கள் தொடர்ந்தாலும் அசோக் கெலாட்டின் சாமர்த்தியத்தால் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தலைவர் சச்சின் பைடல் சமரசத்துக்கு வந்தார். ஆபரேசன் தாமரை முதல் தோல்வியை சந்தித்தது ராஜஸ்தானில்தான். எனவே அசோக் கெலாட்டை முதல் சாய்சாக வைத்திருக்கிறது காங்கிரஸ் தலைமை. அத்துடன் அவர் காந்தி குடும்பத்தின் விஸ்வாசி என்பது கூடுதல் பிளஸ்.