இடைத் தேர்தல்.. சட்டசபை தேர்தல்.. எல்லா இடமும் பாஜக அமோகம்.. எப்படி சாத்தியம்? சிம்பிள் லாஜிக்தான்
டெல்லி: கொரோனா நோய் பரவல், வேலைவாய்ப்பு பிரச்சினை, தொழிலாளர் நடந்தே சொந்த மாநிலங்களுக்கு சென்றது போன்ற இத்தனை பிரச்சினைகளுக்கு நடுவேயும் பீகார் மட்டும் இல்லை, 11 மாநிலங்களில் நடைபெற்ற 58 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களிலும் பாஜக கூட்டணி அமோக முன்னிலை பெற்றுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் கொண்ட மாநிலம் பீகார். கொரோனா நோய் பரவல் மற்றும் ஊரடங்கு போன்றவற்றின் காரணமாக பல மாநிலங்களிலும் தங்கியிருந்து வேலை பார்த்த பீகார் மக்கள் கால்நடையாகவே நடந்து தங்களது சொந்த மாநிலத்துக்கு திரும்பினர்.
அவர்களின் ஓட்டுக்களை அறுவடை செய்வதற்காக தான் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ்.
பாஜக கூட்டணி நல்ல முன்னேற்றம்
ஆனால், இன்று பிற்பகல் 2 மணியளவிலான தகவல்படி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைமையிலான கூட்டணி 99 இடங்களிலும், பாஜக கூட்டணி 133 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. கர்நாடகாவில் இடைத்தேர்தல் நடைபெற்ற இரண்டு தொகுதிகளிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. மத்திய பிரதேசத்தில் 28 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அங்கு பாஜக ஆட்சி தொடருமா இல்லையா என்பதை நிர்ணயிக்க கூடிய அளவுக்கு இந்த இடைத்தேர்தல் முக்கியமாக பார்க்கப்பட்டது. அப்படி இருக்கும்போது கூட, பாஜக ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் விரும்பியுள்ளதை டிரெண்ட் காட்டுகிறது. 19 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. எனவே சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்கிறது.
11 மாநில இடைத் தேர்தல் முடிவுகள்
நாடு முழுக்க 11 மாநிலங்களில் 58 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானா, கர்நாடகா, குஜராத், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், மணிப்பூர் என பல மாநிலங்களிலும் பரந்து விரிந்து, தேர்தல் நடைபெற்ற போதிலும் பாஜக இந்த அளவுக்கு அதிகமான இடங்களில் முன்னிலையில் உள்ளது. இது ஒட்டு மொத்தமாக இந்தியாவின் நாடித்துடிப்பை கணிக்கும் ஒரு முடிவாக பார்க்கப்படுகிறது.
பாஜகவுக்கு பாசிட்டிவ் சிக்னல்
கொரோனா நோய் பரவிய காலத்தில் பிற நாடுகளை விட பாஜக தலைமையிலான மத்திய அரசு, நிலைமையை, சிறப்பாக கையாண்டு இருக்கிறது என்றும், பொருளாதாரத்தை வீழ்ச்சி அடைய விடவில்லை என்றும் இந்த முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம்.
எதிர்க்கட்சிகள் இணையவில்லை
மற்றொரு பார்வையும் இருக்கிறது. பாஜக கூட்டணிக்கு எதிராக ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்பதற்கு வலு இல்லாமல் இருக்கின்றன என்றும் இந்த முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்துக்கு, கர்நாடகாவில், பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவியது. எதிர்க்கட்சி ஓட்டு இரண்டாக பிரிந்தது. பாஜக எளிதாக வெற்றி பெற முடிந்தது.
காங்கிரஸ் பலவீனம்
இந்தியா முழுக்கவும் காங்கிரஸ் மிகவும் பலவீனமாக இருக்கிறது. பீகாரிலும், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணி அதிக இடங்களை பிடிக்க முடியாமல் திணறுவதற்கு, காங்கிரஸ் குறைவான தொகுதிகளில் முன்னிலை பெறுவதும் ஒரு முக்கியமான காரணம். எனவே இந்த தேர்தல் முடிவுகளை பாஜக ஆட்சியின் வெற்றி என்று ஒரு தரப்பு எடுத்துக்கொள்கிறது. மற்றொரு தரப்பு, எதிர்க்கட்சிகளின் பலவீனம்.. அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பலவீனம் காரணமாக பாஜக எளிதாக வெற்றி பெறுகிறது என்றும் எடுத்துக் கொள்கிறது.