டெல்லியில் போலீஸாருக்கே பாதுகாப்பு இல்லை.. மக்களை யார் காக்கப் போறாங்க.. கெஜ்ரிவால் வேதனை
டெல்லி: டெல்லியில் போலீசுக்கே பாதுகாப்பு இல்லையெனும்போது டெல்லி மக்களை யார் பாதுகாப்பார்கள் - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்டதை அடுத்து டெல்லியில் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் டெல்லி குடிமக்களை யார் பாதுகாப்பார்கள் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் உள்ள விவேக் விகார் கஸ்தூர்பா நகரில் போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் ரவுடிகளால் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிறன்று இரவு உணவை முடித்த பின்னர் போலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் விவேக் விஹார் பகுதியில் உள்ள கஸ்தூர்பா நகரில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் சட்டவிரோதமாக கூடியிருந்த ரவுடிகள் திடீரென சண்டையிட்டுள்ளனர்.
இதைப் பார்த்த சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். இதை ரவுடிகள் பார்த்துவிட்டனர். பின்னர் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமாரை அவர்கள் துரத்த தொடங்கியுள்ளனர். தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள தப்பித்து ஓடிய ராஜ்குமாரை விரட்டி சென்ற ரவுடிகள் அவரை கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இந்திராகாந்தி மாதிரி கொல்லப்படலாம்.. நான் சாக வேண்டுமென 'பிரதமர்' விரும்புகிறார்.. கெஜ்ரிவால் பகீர்
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறை குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்து டிவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியில் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை எனும்போது டெல்லி மக்களை யார் பாதுகாப்பார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கொலை செய்யப்பட சப் இன்ஸ்பெக்டரின் குடும்பத்திற்கு கடவுள் தைரியத்தை கொடுக்கட்டும் என்றும் அரவிந்த் கேஜ்ரிவால் டிவீட் செய்துள்ளார்.
டெல்லியில் காவல்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிட தக்கது.