என்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது!
டெல்லி: மகாத்மா காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என்று பள்ளி தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி குஜராத் கல்வித்துறை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் 'சுபலம் ஷாலா விகாஸ் சங்குல்' என்ற பேனரின் கீழ் இயங்கும், பள்ளியொன்றில், 9 ஆம் வகுப்புக்கு, நடத்தப்பட்ட உள் மதிப்பீட்டு தேர்வின் போதுதான் இப்படி ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
தலைநகரான, காந்திநகரில் அரசு மானியங்களைப் பெறும் சில சுயநிதிப் பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்புதான் 'சுபலம் ஷாலா விகாஸ் சங்குல்'. இதுதான் ஒரு சர்ச்சை என்று பார்த்தால், 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வுத் தாளில் மற்றொரு கேள்வி சர்ச்சையை எழுப்பியுள்ளது.
அந்த கேள்வியில், உங்கள் பகுதியில் மது விற்பனை அதிகரித்து வருவதையும், மதுகுடிப்போரால் ஏற்படும் தொல்லைகளையும் பற்றி மாவட்ட காவல்துறைத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதுவது போல எழுதுங்கள் என கேட்கப்பட்டிருந்தது.
இதுபற்றி, காந்திநகர் மாவட்ட கல்வி அதிகாரி பாரத் வாதர் கூறுகையில், சனிக்கிழமையன்று நடைபெற்ற உள் மதிப்பீட்டுத் தேர்வுகளுக்கு இந்த இரண்டு கேள்விகளும் சுயநிதிப் பள்ளிகளும், மானியங்களைப் பெறும் பள்ளிகளும் அடங்கியுள்ள கூட்டமைப்பால் தயாரிக்கப்பட்டவை.
இந்த வினாக்கள் மிகவும் ஆட்சேபிக்கத்தக்கவை. நாங்கள் இதுதொடர்பாக விசாரணையை ஆரம்பித்துள்ளோம். விசாரணை அறிக்கை வந்ததும் நடவடிக்கை எடுக்கப்படும், இந்த பள்ளிகளின் நிர்வாகத்தால்தான் வினாத்தாள்கள் உருவாக்கப்பட்டன. மாநில கல்வித் துறைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறினார்.
மகாத்மா காந்தி நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.