"மாஸ்டர் மைண்ட்" அஜித் தோவல்.. பிஎஃப்ஐ தடைக்கு முன் "ரகசிய" மீட்டிங்.. வெற்றிபெற்ற ஆபரேஷன் ஆக்டோபஸ்
டெல்லி: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டதற்கு பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கியமான மாஸ்டர் மைண்டாக செயல்பட்டார் என்று கூறப்படுகிறது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அமைப்புடன் தொடர்புடைய கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், என்.சி.எச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்புக்கும் தடை விதிக்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பை தடை செய்வதற்காக மத்திய அரசு "ஆபரேஷன் ஆக்டோபஸ்" என்ற செயல் திட்டத்தை கையில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தமிழ்நாட்டில் தடை.. மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசும் அரசாணை
போராட்டங்கள்
இந்த தடை செய்யப்பட்ட பின் நாடு முழுக்க போராட்டங்கள் நடக்கலாம், ஆர்ப்பாட்டங்கள் நடக்கலாம் என்ற அச்சம் நிலவியது. முக்கியமாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மத பிரிவினை அதிகம் உள்ள மாநிலங்களில் போராட்டங்கள் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை எதிர்பார்த்து நாடு முழுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. போராட்டங்கள் வெடிக்க கூடாது என்பதற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் விரைவு படை போலீசார், சிறப்பு படை பிரிவினர், அவசர படை பிரிவு போலீசார் என்று ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள போலீஸ் பிரிவினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
போராட்டங்கள் நடக்கவில்லை
ஆனால் இவ்வளவு செய்தும் பெரிதாக எங்கும் போராட்டங்கள் இதுவரை நடக்கவில்லை. உத்தர பிரதேசத்தில் 10 நிமிட அடையாள போராட்டம் சில இடங்களில் நடந்தது. கோவையில் இஸ்லாமிய பெண்கள் சில நிமிடம் ஆர்ப்பாட்டம் செய்தனர். கேரளாவிலும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. மற்றபடி வேறு எங்கும் போராட்டங்கள் எதுவும் நடக்கவே இல்லை. இந்த தடையை மிகவும் அமைதியாக, திட்டமிட்டு மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது.
எப்படி நடந்தது?
இந்த தடைக்கு பின்பாக ஆபரேஷன் ஆக்டோபஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம். இந்த ஆபரேஷன் மூலம் 4 விதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
1. ஆதாரங்களை திரட்டுவது
2. மாநில அரசுகளை தயார் செய்வது
3. போராட்டங்களை தடுக்க முன்னெச்சரிக்கை
4. தடை விதிப்பது.
இந்த நான்கையும் அரசு கச்சிதமாக செய்துள்ளது.
ஆபரேஷன்
அதன்படி முதல் கட்டமாக கடந்த 22- ந் தேதி என்ஐஏ மூலம் ரெய்டு நடத்தப்பட்டது. 15 மாநிலங்களில் பி.எப்.ஐ. இயக்க நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. மொத்தம் 93 இடங்களில் மாநில அரசின் ஒத்துழைப்புடன் மெகா ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டுகளின் போது அந்த இயக்கத்தின் 106 தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இரண்டாவது கட்டமாக நேற்று முதல் நாள் 8 மாநிலங்களில் நேற்று பி.எப்.ஐ. நிர்வாகிகள் வீடுகள், அலுவலகங்களில் என்.ஐ.ஏ. ரெய்டு நடத்தப்பட்டது. 8 மாநிலங்களில் 200-க்கும் மேற்பட்ட பி.எப்.ஐ. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.
மாநில அரசுகள்
இது முழுக்க முழுக்க மாநில அரசுகளின் உதவியுடன் செய்யப்பட்டது. இதிலேயே எல்லா முக்கியமான ஆதாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அமைப்பை தடை செய்வதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதை தொடர்ந்து மாநில அரசுகளுக்கு தடை தொடர்பாக முன்பே அறிவிக்கப்பட்டது. சட்ட ஒழுங்கு பிரச்சனை வரலாம் என்பதால் உள்துறை அதிகாரிகள் மூலம் மாநில அரசுகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதில் எல்லாம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் முக்கிய பங்கு வகித்து உள்ளார்.
இஸ்லாமிய தலைவர்கள்
இது போக மூன்றாவதாக போராட்டங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இஸ்லாமிய தலைவர்களை அஜித் தோவல் சந்தித்து பேசினார். கடந்த 17-ம் தேதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இஸ்லாமிய தலைவர்கள் பலரை சந்தித்து பேசினார். தியோபந்தி, பரெல்வி மற்றும் சூபி செக்ட்ஸ் ஆப் இஸ்லாம் உள்ளிட்ட மிகப்பெரிய முஸ்லிம் அமைப்புகளுடன் ஆலோசனை செய்தனர். இதில் பிஎப்ஐ பற்றி பேசியதாக கூறப்படுகிறது. இதெல்லாம் போக சமீபத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இஸ்லாமிய அறிஞர்களுடன் ஆலோசனை செய்தார்.
ஆலோசனை
இந்த ஆலோசனையில் பிஎப்ஐ குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி நாங்கள் மத ரீதியான அமைப்புகளுக்கு எதிரி இல்லை. மதத்தை வளர்க்க செயல்படும் அமைப்புகள் சிக்கல் இல்லை. ஆனால் கொலை, வன்முறையில் ஈடுபடும் அமைப்புகள்தான் பிரச்சனை என்று இந்த தலைவர்களிடம் பேசி.. பிஎப்ஐ தடை குறித்து முன்பே தெரிவித்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சூபி செக்ட்ஸ் ஆப் இஸ்லாம் அமைப்பு பிஎப்ஐ தடையை வரவேற்று உள்ளது.
வரவேற்று அறிவிப்பு
பெரிய அளவில் போராட்டம் செய்யலாம் சில இஸ்லாமிய அமைப்புகளே இதை வரவேற்க அஜித் தோவல் நடத்திய பேச்சுவார்த்தைதான் காரணம் என்கிறார்கள். இப்படி இஸ்லாமியர்களையம் தயார் செய்த பின்பே இதற்கான தடை விதிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இதன் மூலமே போராட்டங்களை தவிர்த்து உள்ளனர். இந்த மொத்த தடையில் அஜித் தோவல் பங்கு முக்கியம் என்கிறார்கள். அதோடு மாநில அரசுகளும் வேறுபாடுகளை களைந்து இதில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. உதாரணமாக சிபிஎம் கேரள அரசு, பாஜகவை எதிர்த்தாலும், பிஎப்ஐ அமைப்பை எதிர்ப்பதில் பாஜகவுடன் கரம் கோர்த்து ஆபரேஷன் பணிகளை செய்தது குறிப்பிடத்தக்கது.