சீன ஆதிக்கத்தால் குழம்பிப் போன அமெரிக்கா.. டிரம்புக்கு ரூட் போட்டு தந்த இந்தியா.. இனிமே இப்படித்தான்
டெல்லி: சீனாவின் செயலிகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்து இருக்கும் நடவடிக்கைகளுக்கு பின் இந்தியாவின் வழிகாட்டுதலும் இருக்கிறது.
''இந்தியா எப்போதும் நடுநிலையாக செயல்பட்டு வந்தது. உலக நாடுகளின் மோதலில் இந்தியா அணி சேரவில்லை. இதற்கு முன் இந்தியா எப்போதும் அணி சேர்ந்தது இல்லை. ஆனால் இனிமேல் இந்தியா அப்படி இருக்க முடியாது.
அதற்கான காலங்கள் மாறிவிட்டது. இந்தியா எப்போதும் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்க முடியாதது. இந்தியா தற்போது சில ரிஸ்குகளை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது'.... இப்படி கூறியவர் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
Recommended Video
இந்தியா கொள்கை
ஆம் ஒரு காலத்தில் அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பில் இருந்த இந்தியாவின் புதிய வெளியுறவுக்கொள்கை இனி இதுதான். இதுவரை அமைதியான, அமைதியை விரும்பும் நாடாக இருந்த இந்தியா தற்போது அடித்து ஆட தொடங்கி உள்ளது . வெளிப்படையாக சீனாவுடன் இந்தியா தனது மோதலை தீவிரப்படுத்தி உள்ளது. எல்லையில் ராணுவ ரீதியான மோதலை இந்தியா ஒரு பக்கம் திறமையாக கையாண்டு வருகிறது. பேச்சுவார்த்தை, ராணுவ நடவடிக்கை இரண்டின் மூலமும் எல்லையில் இந்தியா சீனாவை கட்டுப்படுத்தி வருகிறது.
எப்படி பொருளாதாரம்
எல்லை பிரச்சனை இருக்கும் நிலையில் சீனா கொஞ்சமும் எதிர்பார்க்காத நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சீனா மீது பொருளாதார ரீதியான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அதன்படி சீனாவின் செயலிகளை இந்தியா தடை செய்தது. முதலில் 59 செயலிகள், அதன்பின் 50 செயலிகள் என்று அடுத்தடுத்து தடை செய்தது. அதோடு சீனாவில் இருக்கும் அமெரிக்கா நிறுவனங்களை இந்தியா வளைத்தது.
சர்ஜிக்கல் ஸ்டிரைக்
சீனாவுடன் அமெரிக்கா கடைபிடிக்கும் மோதலை பயன்படுத்திக் கொண்டு, சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களை இந்தியா கொண்டு வந்தது. அதோடு சீனாவில் இருக்கும் தைவான் நாட்டு நிறுவனங்களும் கூட இந்தியாவிற்கு வந்தது. இது சீனாவை பெரிய அளவில் முடக்கிப்போட்டது. சீனாவிற்கு எதிரான இந்தியாவின் பொருளாதார ரீதியான சர்ஜிக்கல் ஸ்டிரைக் இது என்று பார்க்கப்படுகிறது.
வழிகாட்டுதல்
இதுதான் தற்போது அமெரிக்காவிற்கு புதிய வழிகாட்டுதலாக அமைந்து உள்ளது. அமெரிக்கா - சீனா இடையே இரண்டு வருடமாக வர்த்தக ரீதியான போர் நிலவி வருகிறது. இரண்டு நாடுகளும் மாறி மாறி எதிரி நாட்டு நிறுவனங்கள் மீது அதிக வரியை விதித்துக்கொண்டே சென்றது. சீனாவின் ஹுவாவே நிறுவனம் காரணமாக தொடங்கிய மோதல் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்தது.
அமெரிக்கா எப்படி
இப்படி சீனாவுடன் பொருளாதார ரீதியான மோதல் இருந்த போதெல்லாம் அமெரிக்கா அதை சுமூகமாக தீர்க்க வேண்டும் என்றுதான் நினைத்தது. அதாவது சீனாவுடன் மோதல் வேண்டாம். அவர்களின் மக்கள் தொகை நமக்கு முக்கியம். அவர்களின் சந்தை மிகப்பெரியது. சீனாவை பகைக்க முடியாது என்று அமெரிக்கா அடக்கமாக இருந்தது. சீனா மீது கோபம் இருந்தாலும் கூட, அமெரிக்க பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் செய்யவே முயன்றது.
யோசனை
கடந்த மே மாதம் வரை, சீனாவுடன் மொத்தமாக உறவை துண்டிக்கும் எண்ணத்திற்கு அமெரிக்கா வரவில்லை. சீனாவில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களும் இதனால் பாதிக்கும் என்பதும் இதற்கு ஒரு காரணம். இந்த நிலையில்தான் தற்போது சீனாவின் செயலிகளை தடை செய்யும் அளவிற்கு அமெரிக்கா மாறியுள்ளது. சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் உள்ளிட்ட நிறுவனங்கள் உடன் எந்த விதமான பரிவர்த்தனையும் மேற்கொள்ள கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
மொத்தமாக தடை
அதன்படி டிக்டாக், வீ சாட், டென்சென்ட் ஆகிய நிறுவனங்களுடன் பரிவர்த்தனையை மேற்கொள்ள கூடாது. இன்னும் 45 நாட்களுக்குள் மொத்தமாக பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். பங்குகள் ரீதியாக அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், தடையை விதிப்பதற்காக இந்த முடிவை டிரம்ப் எடுத்து உள்ளார். இந்தியா சீன செயலிகள் மீது இதேபோல் தடை விதித்து இருந்தது.
ஏன் துணிச்சல்
சீனா மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அமெரிக்க தற்போது தனது முதல் நடவடிக்கையை எடுத்துள்ளது. அமெரிக்கா திடீரென துணிச்சலாக நெஞ்சை நிமிர்த்தி உள்ளது. சீனாவின் செயலிகளை இந்தியா தடை செய்ததுதான் அமெரிக்காவின் இந்த துணிச்சலுக்கு காரணம் என்கிறார்கள். அதாவது சீனா இல்லாமலும் இருக்க முடியும். சீனாவின் சந்தையை நம்பாமல் இருக்க முடியும் என்று இந்தியா அமெரிக்காவிற்கு வழிகாட்டி உள்ளது.
இந்திய அதிரடி
சீனாவின் செயலிகளை தடை செய்தால், அமெரிக்காவின் செயலிகள், நிறுவனங்களுக்கு ஆபத்து வருமோ என்று அமெரிக்கா அஞ்சியது. இதனால்தான் சீனாவுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தைக்கு முயன்றது. ஆனால் அமெரிக்கா செய்ய தயங்கிய விஷயத்தை இந்தியா அதிரடியாக செய்தது. இந்தியாவின் முடிவு பலன் அளித்ததை பார்த்த அமெரிக்கா தற்போது இந்தியாவை போலவே சீனாவின் செயலிகளை தடை செய்யும் முடிவிற்கு வந்துள்ளது.
இந்தியா ஆதிக்கம்
ஒரு காலத்தில் அணிசேரா நாடாக இருந்த இந்தியா தற்போது அமெரிக்கா போன்ற நாடுகளின் வெளியுறவு கொள்கையில் அதிரடியாக ஆதிக்கம் செலுத்த தொடங்கி இருக்கிறது. தென்சீன கடல் எல்லை பிரச்சனை தொடங்கி ஹாங்காங் மோதல் வரை இந்தியா அனைத்திலும் சீனாவிற்கு செக் வைத்து வருகிறது. இந்தியாவை பின்பற்றி வல்லரசு நாடான அமெரிக்காவும் வலம் வர தொடங்கி உள்ளது.