விமான தாக்குதலுக்கு ஆதாரம் கேட்டீங்களே.. பாலகோட் இப்போ எப்படி இருக்கிறது? வெளியான புகைப்படம்
டெல்லி: பாகிஸ்தானுக்குள் புகுந்து ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்களை, இந்திய விமானப்படை குண்டு வீசி தாக்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. பாகிஸ்தான் தங்கள் தரப்பில் யாருக்கும் பாதிப்பு இல்லை என கூறினாலும், அந்த பகுதியிலுள்ள கட்டிடங்களில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு மராமத்து பணிகள் நடந்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பாலகோட் தீவிரவாத முகாம் கடந்த ஆண்டு பிப்ரவரி 26 அதிகாலையில் இந்திய விமானப்படையின் தாக்குதலில் அழிக்கப்பட்டது.
முதல் ஆண்டுவிழாவிற்கு முன்பே, பாகிஸ்தான் பாலகோட் முகாமை சரிசெய்து, அதில் சில கட்டமைப்பு மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த மாற்றங்கள் உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களின் உதவியுடன் செய்யப்பட்ட பகுப்பாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
15 வயசு சிறுவனின் காலில் இரும்புக் கம்பி அடி.. துடித்த குழந்தை.. ஏன் இந்த வெறி?
மாற்றம்
இதுபோன்ற சில மாற்றங்கள் 2019 டிசம்பர் மூன்றாவது வாரத்தில் செய்யப்பட்டுள்ளதாம். ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பால் நடத்தப்படும் இந்த முகாம், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின், ஜப்பாவில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பரவியுள்ளது. மதரஸாவும் இங்கு நடத்தப்படுகிறது.
இந்த நிலையில்தான், பாலகோட் முகாம் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 விமானத்தால் 2019ம் ஆண்டு பிப்ரவரி 26 அதிகாலையில் இஸ்ரேலிய தயாரிப்பு லேசர் குண்டுகளால் துளைக்கப்பட்டது.
செயற்கைக்கோள் படங்கள்
அப்போதும், இப்போதும் உள்ள நிலைமையை, உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்களை வைத்து ஒப்பிட்டால், வடக்கு திசையில் ஒரு சிறிய அமைப்பு அதன் அசல் அளவை விட சிறியதாக இருப்பதை பார்க்க முடிகிறது. மேலும், 2019 பிப்ரவரியில் சுமார் 201 சதுர மீட்டர் பரப்பளவில் பரவியிருந்த இந்த கட்டிடம், 2019 டிசம்பரில் 128 சதுர மீட்டராக சுருங்கியிருப்பதைக் காணலாம்.
கூரை அமைப்பு
முகாமின் வடக்கு பகுதியில் உள்ள பிரமிடு போன்ற கூரை அமைப்பு இந்திய விமானப்படையின் வான்வழித் தாக்குதலின் போது முஜாஹித் விடுதி எனக் தெரிவிக்கப்பட்டது. இந்த பகுதியில், தாக்குதல் நடத்திய போது, பெரும்பாலான ஜெய்ஷ் இ தீவிரவாதிகள் தூங்கிக் கொண்டு இருந்தனர். டிசம்பர் முதல் வாரத்தில் கூரையின் வடமேற்குப் பகுதியிலிருந்து ஏதோ அகற்றப்பட்டது புகைப்படங்களில் தெரியவந்தது.. ஆனால் அது டிசம்பர் மூன்றாவது வாரத்தில் அது காட்டப்படவில்லை.
மாற்றங்கள்
இப்பகுதியின் மேற்கு திசையில் அமைந்துள்ள பெரிய பிரதான மண்டபத்திலும் சில சிறிய மாற்றங்களைக் காணலாம். மண்டபத்தில் பெரிய சாய்வான கூரை உள்ளது. இந்த கூரையின் அகலத்தின் அளவு மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் இரண்டு வெவ்வேறு ரிசல்ட்டை காட்டுகிறது. கடந்த பிப்ரவரியில் கூரையின் அகலம் சுமார் 35 மீட்டர் இருந்தது. இது டிசம்பர் முதல் வாரத்தில் 32 மீட்டராக சுருங்கியது. இருப்பினும், 2019 டிசம்பர் மூன்றாவது வாரத்தில், கூரையின் அகலம் மீண்டும் அதன் அசல் அளவான 35 மீட்டருக்கு மாற்றப்பட்டது.
வெளிநாட்டு குழு
பிப்ரவரியில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தய பிறகு, வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மதரஸாவுக்கு செல்ல பாகிஸ்தான் ராணுவம் தடை விதித்தது. பாகிஸ்தான் ராணுவ இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸின் (ஐ.எஸ்.பி.ஆர்) ஊடகப் பிரிவு, 40 நாட்களுக்குப் பிறகு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் தூதர்கள் குழுவை பாலகோட்டிற்கு அழைத்துச் சென்றது.
வீர தீரம்
பாலகோட் ஒரு வெற்றிகரமான அதிரடி தாக்குதல் என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. பாகிஸ்தான் இதை மறுக்கிறது. ஆனால் இந்த செயற்கைக்கோள் புகைப்படங்கள், அங்குள்ள கட்டிடங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதை காட்டுகிறது. இது பாகிஸ்தானின் பொய்யை அம்பலப்படுத்துவது போல உள்ளது. இந்திய விமானப்படையின் வீர தீரத்தையும், இந்த படங்கள் எடுத்துக் காட்டுகிறது.