பெகாசஸ் விவகாரம்: பிரதமர் மோடியால் எத்தனை நாட்களுக்கு ஓடி ஒளிய முடியும்?.. ப.சிதம்பரம் கேள்வி!
டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி எத்தனை நாட்களுக்கு ஒளிந்து மறைந்து தப்பிக்க முடியும்? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார். பெகாசஸ் என்ற ஸ்பைவேர் ஒட்டுகேட்பு விவகாரம்தான் இந்தியா முழுவதும் பேசும் பொருளாக இருக்கிறது.
இந்தியாவில் சுமார் பத்திரிகையாளர்கள், அதிகாரிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அரசு, ராகுல் காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன்கள் ஹேக் செய்யப்பட்டு ஒட்டு கேட்டகப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் பெகாசஸ் விவகாரத்தை கையில் எடுத்து நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர் எதிர்க்கட்சிகள்.
ராகுல் காந்தி கேள்வி
பெகாசஸ் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. விசாரணை நடத்துவதில் மத்திய அரசுக்கு என்ன தயக்கம் இருக்கிறது? ஏன் ஒடி ஒளிகிறார்கள்? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டினார்.
ப.சிதம்பரம்
இந்த நிலையில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி ஏன் மறைந்து கொள்கிறார்? என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறி இருப்பதாவது:- பெகாசஸ் உளவு மென்பொருள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது பல நாடுகளை உலுக்கியுள்ளது. பிரான்ஸ் நாடு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் அரசு சோதனை
இரண்டு பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன என்று பிரான்ஸ் நாட்டின் சம்பந்தப்பட்ட துறை அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் முறையீட்டைத் தொடர்ந்து அந்த நாட்டைச் சமாதானப்படுத்தவதற்காக இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரான்ஸ் நாட்டுக்கு விரைந்துள்ளார் உளவு மென்பொருளை உருவாக்கிய NSO குழுமத்தின் அலுவலகங்களில் இஸ்ரேல் அரசு சோதனை நடத்தியுள்ளது.
ப.சிதம்பரம் தாக்கு
சோதனையைத் தொடர்ந்து NSO குழுமத்தின் மீது விசாரணை தொடங்கியுள்ளது. இவ்வளவுக்கும் பிறகு எந்த உளவு வேலையும் நடக்கவில்லை என்று மோடி அரசு சாதிக்கிறது. நாடாளுமன்றத்தில் திறந்த விவாதம் வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் நியாயமான கோரிக்கையை மோடி அரச முரட்டுத்தனமாக நிராகரிப்பது ஏன்? மோடி அரசின் பிடிவாதமும் நிராகரிப்பும் நமது சந்தேகங்களை உறுதிப்படுத்துகின்றன அல்லவா? எத்தனை நாட்களுக்கு மோடி அரசு ஒளிந்து மறைந்து தப்பிக்க முடியும்? என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.