ம. பியிலும் பாஜகவை வேட்டையாடிய நோட்டா.. வாக்கு வித்தியாசத்தைவிட நோட்டா ஓட்டு அதிகமான சோகம்
Recommended Video
டெல்லி: மத்திய பிரதேசத்தில் பாஜகவின் தோல்விக்கு நோட்டா வாக்குகள் முக்கிய பங்கு வகித்துள்ளன.
நடைபெற்று முடிந்த மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில், பாஜக 109 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பறி கொடுத்தது. 114 தொகுதிகளை வென்ற காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் நோட்டா முக்கிய பங்காற்றியுள்ளது.
மொத்தம் 5.4 லட்சம் வாக்குகள் நோட்டாவில் விழுந்துள்ளன. மொத்த வாக்குகளில் இது 1.4 சதவீதம் என்பது அரசியல் கட்சிகளுக்கு கவலையளிக்கும் விஷயமாகும். மொத்த வாக்குகளில் பாஜக 41 சதவீதம் பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 40.9 சதவீத வாக்குகள் கிடைத்தன. பகுஜன் சமாஜ் கட்சி 5 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
நோட்டா அதிகம்
குவாலியர் தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் நாராயணன் சிங் குஷ்வாஹா வெறும் 121 வாக்குகளில் வெற்றியை பறி கொடுத்தார். இங்கு நோட்டா பெற்ற வாக்குகள் 1,550. இதை பார்த்தால் நாராயண் சிங் ஷாக்காகுவார் என்பது உறுதி.
மாஜி அமைச்சர்கள்
தாமோ தொகுதியில், முன்னாள் நிதி அமைச்சர் ஜெயந்த் மலாயா 799 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு நோட்டாவிற்கு 1299 வாக்குகள் கிடைத்தன. பாஜக வேட்பாளரும், சுகாதாரத்துறை இணை அமைச்சருமான, சதர் ஜெயின், ஜபல்பூர் தொகுதியில், 578 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். நோட்டாவிற்கு இங்கு கிடைத்த வாக்குகள் எண்ணிக்கை 1299.
அர்ச்சனா அதிர்ச்சி
புர்ஹான்பூர், தொகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த அர்ச்சனா 5,120 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஆனால், இங்கு நோட்டா பெற்ற வாக்குகளை அறிந்தால் அர்ச்சனா அதிர்ச்சியடைவார். நோட்டாவிற்கு 5700 வாக்குகள் பதிவாகியுள்ளன.
காங்கிரசுக்கும்
பாஜகவிற்கு மட்டுமல்ல, காங்கிரஸ் தலைவர்களிடமும் நோட்டா கருணை காட்டவில்லை. திமார்னி தொகுதியில் நோட்டாவிற்கு, 4,084 வாக்குகள் விழுந்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர் அபிஜீத் சாகா 2,213 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு தோற்றுல்ளார். நாகோட் தொகுதியில், காங். வேட்பாளர், யாவேந்திர சிங் 1234 வாக்குகள் வித்தியாசத்தில், தோல்வியடைந்தார். இங்கு, நோட்டா 2,301 வாக்குகளை பெற்றுள்ளது.
ஆர்கேநகர்
சென்னை, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், நோட்டாவைவிட பாஜக குறைவான வாக்குகளை பெற்றது, பெரும் கேலி கிண்டலுக்கு உள்ளான சம்பவமாகும். அப்போது முதலே, பாஜகவும், நோட்டாவும் இரட்டை குழந்தைகள் போல மாறிவிட்டன. யாருதான் நோட்டாவை கண்டுபிடிச்சாங்களோ என நறநறவென பாஜக தலைவர்கள் பலரும் பல்லை கடிக்கிறார்களாம்.