மோடியின் தம்பி மகளிடம் வழிப்பறி நடந்தது எப்படி? பரபரப்பு தகவல்கள்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் மகளிடம் டெல்லியில் கைப்பையுடன் பணம் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் குறித்து அந்த பெண் சில தகவல்களை காவல்துறையினரிடம் கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் தமயந்தி பென் மோடி. இவர் பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி, பிரகலாத் மோடியின் மகளாகும்.
தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் விடுமுறையை கொண்டாட அவர் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் சென்றிருந்தார். பிறகு தங்கள் சொந்த ஊரான குஜராத்தின் அகமதாபாத் செல்வதற்காக டெல்லி விமான நிலையம் செல்ல திட்டமிட்டிருந்தார்.
ஆட்டோ
நேற்று காலை 6.30 மணியளவில், ரயிலில் ஓல்ட் டெல்லி ரயில் நிலையத்தை அடைந்தனர். விமானம் பிற்பகலில்தான் என்பதால் அதுவரை குஜராத்தி சமாஜ் பவனில் தங்கியிருக்க முடிவு செய்து, ஆட்டோவில் ஏறினர். காலை 7 மணியளவில், குஜராத்தி சமாஜ் பவனின் வாசலுக்கு, வெளியே ஆட்டோ ரிக்ஷா நிறுத்தப்பட்டதும் தமந்தி, தனது கணவனுக்கும் குழந்தைகளுக்கும் லக்கேஜ்களை வெளியே எடுத்து வைக்க உதவி செய்தபடி இருந்தார்.
கைப்பை
அப்போது, திடீரென்று, ஸ்கூட்டரில் பயணம் செய்த இருவர் ஆட்டோவின் அருகே வந்தனர். அவர்கள் தமயந்தியின் மடியில் இருந்த அவரது கைப்பையை பறித்துக்கொண்டு ஓடிவிட்டார்கள்.
15 நிமிடங்கள்
திருடர்களை தயமந்தி கவனித்துள்ளார். சுமார் 15 நிமிடங்கள் ஆட்டோவையே பின்தொடர்ந்து வந்து கைப்பையை பறித்துள்ளனர். திருடியவர்கள் டீன்ஏஜ் வயதினர் என தெரியவந்துள்ளது. தமயந்தி அளித்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 379 மற்றும் 365 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயர் பாதுகாப்பு
"எல்லாம் சில நொடிக்குள் நடந்தது. டெல்லியில் உயர் பாதுகாப்பு பகுதியில் இந்த வழிப்பறி நடந்ததால் நான் அதிர்ச்சியடைந்தேன். அதேநேரம் எனது புகாருக்கு காவல்துறையினர் விரைவாக ரெஸ்பான்ஸ் செய்து, வழக்கை பதிவு செய்தனர், " என்று தமந்தி தெரிவித்துள்ளார். இன்று மதியம் 1.30 மணியளவில் விருந்தினர் மாளிகையை விட்டு கிளம்பி டெல்லி ஏர்போர்ட்டுக்கு அவர் குடும்பத்தோடு சென்றார்.
அசல் ஐடிகார்டுகள்
தமயந்தி மற்றும் அவரது குழந்தைகளின் அசல் ஐடி கார்டுகள் அனைத்தும் திருடப்பட்ட பையில் இருந்ததால், அவர்கள் அனைவரும் மாலை 4 மணியளவில் அகமதாபாத்திற்கு விமானத்தில் ஏற செல்லும்போது சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்ற பதற்றம் இருந்தது.
ஆனால், டெல்லி விமான நிலையத்தில் நுழைவதற்கு காவல்துறையினர் தயமந்தி குடும்பத்திற்கு உதவிகளை செய்துள்ளனர். எனவே அவர்கள் பயணத்திற்கு சிக்கல் ஏற்படவில்லை. இந்த சம்பவம் குறித்து பிரதமர் அலுவலகத்திலிருந்து தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை. ஒருவேளை பிரதமருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை என தமயந்தி தெரிவித்தார்.