இந்தியாவின் ரஃபேல், சீனாவின் ஜே 20, பாகிஸ்தானின் ஜே 17.. எந்த போர் விமானம் கில்லி? முழு விவரம்
டெல்லி: சீனாவின் அதிநவீன செங்டு ஜே 20 போர் விமானமும், பாகிஸ்தானின் அதி நவீன எப் 16 (அமெரிக்க இறக்குமதி) போர் விமானமும், சீனா சப்ளை செய்த செங்டு ஜே 17 தண்டர், இந்தியாவின் அதி நவீன கேம் சேஞ்சர் என்று புகழப்படும் ரஃபேல் போர் விமானத்தை எதிர்த்து நின்றால் எந்த விமானம் வெற்றி பெறும்? கடந்த சில நாட்களாக இந்தியர்கள் பலரின் மனதில் எழக்கூடிய கேள்வி இதுதான்.
Recommended Video
பிரான்ஸ் நாட்டின் அதி நவீன 4.5ம் தலைமுறையைச் சேர்ந்த போர் விமானமான ரபேலின் முதல் 5 விமானங்கள் இன்று இந்தியா வந்து சேர்ந்துள்ளன. இதன் அருமை பெருமைகளை கேள்விப்பட்டதும்தான், நமது மக்களுக்கு இப்படி ஒரு ஒப்பீடு பற்றிய தேடல் அதிகரித்துவிட்டது.
எது டாப் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா.. காதை பக்கத்தில் கொண்டு வாங்க.. இதோ சொல்கிறோம்.
இந்தியாவுக்கு வந்த 5 ரபேல்.. முதல் விமானத்தை இயக்கி தரையிறக்கியவர் யார்னு தெரியுமா...?
சக்தி வாய்ந்த போர் விமானம்
உலகின் மிக சக்திவாய்ந்த போர் விமானம் கருதப்படுவது ரஃபேல். இந்த விமானத்தின் வருகையால், இந்திய விமானப்படையின் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். சீனாவின் செங்டு ஜே 20 ஜெட் விமானங்கள் ஐந்தாவது தலைமுறை விமானங்கள். ஆனால் 4.5ம் தலைமுறை ரஃபேலுடன் ஒப்பிடும்போது, ஜே 20 க்கு உண்மையான போர் சூழல் அனுபவம் இல்லை. ரஃபேல் போர் விமானங்கள், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் மாலி ஆகிய நாடுகளில் போர்ச்சூழலில் பயன்படுத்தப்பட்டு இலக்குகளை தவிடுபொடியாக்கிய வரலாறு கொண்டவை. மத்திய ஆபிரிக்கா, ஈராக் போன்ற நாடுகளிலும் பிரான்ஸ் நாட்டு விமானப்படையால் ரபேல் வகை விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
உயரம்
ரஃபேல் அதிகபட்ச வேகம் மணிக்கு 2,222.6 கி.மீ. ஜே -20ன் அதிவேக வேகம் மணிக்கு 2,400 கி.மீ. ஜேஎப் -17 தண்டர் மணிக்கு 1975.68 கிமீ வேகத்தில் செல்ல முடியும். ரஃபேல் மற்றும் ஜே.எப் -17 தண்டர் இரு விமானங்களும் அதிகபட்சம், 50,000 அடி உயரம் பறக்க முடியும். ஜே -20, 65,620 அடி உயரத்திற்கு பறக்க முடியும். உயரமாக பறப்பதில் சீன விமானம்தான் முன்னிலையில்தான் உள்ளது.
அதிக ஆயுதங்கள்
ரஃபேல் போர் விமானத்தின் மற்றொரு சிறப்பு, எப் 17 தண்டரைவிட அதிக எரிபொருள் மற்றும் ஆயுதங்களையும் கொண்டு செல்ல முடியும். ஒவ்வொரு விமானத்திலும் ஆயுதங்களுக்காக 14 சேமிப்பு நிலையங்கள் உள்ளன. 190 கிலோ கொண்ட ஏவுகணையை 100 கி.மீ.க்கு அப்பாலுள்ள விஷுவல் ரேஞ்ச்சிலுள்ள இலக்குகளையும் தாக்கியழிக்க முடியும். பாகிஸ்தான் பயன்படுத்தும் எஃப் 16 ஜெட் விமானங்கள் 75 கி.மீ தூரத்திலுள்ள இலக்குகள் மீதுதான் ஏவுகணைகளை வீச முடியும்.
அதிக தூரம்
செயல்பாட்டு வரம்பைப் பொறுத்தவரை (விமானம் தனது தளத்திலிருந்து பயணிக்கக்கூடிய அதிகபட்ச தூரம்) ரஃபேல் விமானம்தான், ஜே -20 மற்றும் ஜே.எப் -17 தண்டர் இரண்டையும் விட மிக உயர்ந்தது. ரஃபேல் விமானம் 3,700 கி.மீ தூரத்திற்கு பறக்கக் கூடியது, வானிலேயே எரிபொருள் நிரப்புவதன் மூலம் இந்த தூரத்தை மேலும் அதிகரிக்கலாம். ஜே 20 மற்றும் ஜேஎப் 17 தண்டர் ஆகியவற்றின் அதிகபட்ச வரம்பு முறையே 2,000 கி.மீ மற்றும் 2,037 கி.மீ. ஆகும். எனவே, ரஃபேல் எதிரிகளின் பகுதிக்குள் அதிக தூரம் பயணிக்க முடியும். சீனாவின், ஜே -20 போர் விமானங்கள் ரேடார் பார்வையில் படாது என கூறப்பட்டாலும், இந்திய ரேடார்களில் அந்த விமானங்கள் பதிவாகியுள்ளது வரலாறு.
முன்னணி ஆயுதங்கள்
ரஃபேல் இப்போதுள்ள பல முன்னணி ஆயுதங்களை எடுத்துச் செல்ல முடியும். எனவே தெற்காசிய வான்பரப்பில், ரபேல்தான் முன்னிலையில் இருக்கப்போகிறது. ரஃபேல், ஜே 20, ஜேஎப் 17 ஆகிய மூன்று போர் விமானங்களிலும் மிகவும் எடை அதிகமாக உள்ளது சீனாவின் ஜே 20 வகை விமானங்கள்தான். காலியான நிலையில், 19,000 கிலோ எடை கொண்டது இந்த விமானம். ரபேல் காலியாக உள்ள நிலையில், 9900 கிலோ எடை கொண்டது. இதனால் எரிபொருள் சேமிப்பு ரஃபேலில் அதிகம். மேலும், இம்மூன்று விமானங்களில் அதிகப்படியான எரிபொருள் கொள்ளளவு கொண்டதும் ரஃபேல்தான். அதிகப்படியான ஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்டதும் ரஃபேல்தான்.
ஏவுகணை
ரஃபேலில் விமானத்தில் உள்ள Meteor ஏவுகணைகளால் எதிரிகளின் இலக்குகளை 150 கி.மீ தூரத்தில் இருந்தும் தாக்கும். இதில் பொருத்தப்படக் கூடிய, மற்றொரு ஏவுகணை 40 கோடி மதிப்புள்ளது. 1,300 கிலோ எடையுள்ளது. இந்த ஏவுகணை விண்ணில் பறந்தபடியே 600 கி.மீ தூரத்திலுள்ள இலக்கை வீழ்த்தும். அதாவது, ரஃபேல் விமானம் நமது நாட்டின் எல்லையை தாண்டாமலேயே எதிரி நாட்டுக்குள் தாக்குதலை நடத்த முடியும். இந்த அளவுக்கான அதிக கி.மீ தூர வசதி, சீனா மற்றும் பாகிஸ்தான் விமானங்களுக்கு இல்லை.
ஹம்மர்
அதிகம் பேசப்படும் மூன்றாவது ஏவுகணை ஹம்மர் ஏவுகணை. இந்த போர் விமானத்தின் திறனை அதிகரிக்க இந்திய விமானப்படை, பிரான்சிலிருந்து ஹம்மர் ஏவுகணைகளை அவசரமாக வாங்கியுள்ளது. விண்ணிலிருந்து 70 கி.மீ தூரம் வரை சரியாக தரையிலுள்ள இலக்குகளை தாக்க வல்லது ஹம்மர். இது பிரெஞ்சு விமானப்படை மற்றும் கடற்படைக்காக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. மலைப்பாங்கான பகுதிகளிலும் இலக்குகளை தாக்க வல்லது. எப்படி பார்த்தாலும், பல்வேறு விஷயங்களில், ரஃபேல்தான் முன்னிலையில் இருப்பதால், தெற்காசிய விமானப் படையின் கிங்காக மாறியுள்ளது இந்திய விமானப்படை. அதனால்தான், ரஃபேல் விமானங்களை இந்தியா கேம் சேஞ்சர் என்று அழைக்கிறது.