இதுதான் டாடா.. A டூ Z எல்லாமே பக்கா ஸ்கெட்ச்.. மின்சார கார் சந்தையில் டாடா போடும் மெகா பிளான்
டெல்லி: இப்போது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாக மின்சார கார்கள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மின்சார கார்கள் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் டாடா நிறுவனம் இதில் ஆக்ரோஷமாக இறங்கியுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது பண வீக்கம் காரணமாக விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த சில காலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளன.
இருப்பினும், நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர், சிறு வணிகர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரிய ரிஸ்க்! பக்கா பிளான் உடன் இறங்கும் டாடா.. அப்படியே குறைய போகுது கார் விலை! அதெப்படி தெரியுமா
மின்சார வாகனங்கள்
இதனால் அவர்கள் மெல்ல எலக்டிரிக் வாகனங்களை நோக்கித் திரும்பி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை டூ வீலர் சந்தையில் மக்களுக்கு நிறைய ஆப்ஷன்கள் உள்ளனர். ஏதர் நிறுவனம் மற்ற நிறுவனங்களைக் காட்டிலும் நீண்ட காலமாக இதில் உள்ளன. மேலும், டிவிஎஸ், ஹீரோ நிறுவனங்களும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இதில் எதிலும் ஆர்வம் இல்லையென்றால் இருக்கவே இருக்கிறது ஓலா. கடந்தாண்டு சந்தைக்குள் வந்த ஓலா.. சில மாதங்களில் சந்தையை ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டுவிட்டது.
மின்சார கார்கள்
ஆனால், இந்தியாவில் 4 வீலர் சந்தையில் மக்களுக்கு இந்தளவுக்கு ஆப்ஷன்கள் இல்லை.. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே மின்சார கார் மாடல்கள் உள்ளன. பெட்ரோல், டீசல் கார்களை ஒப்பீடும் போது, மின்சார கார்கள் விலை ரொம்பவே அதிகம்.. இதன் காரணமாகவே மின்சார கார்கள் பக்கம் செல்ல தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், இந்த நிலைமையை மாற்ற டாடா நிறுவனம் முயன்று வருகிறது. மோட்டர் சந்தையில் டாடாவுக்கு இண்டிகோ தவிர எந்த மாடலும் கை கொடுக்கவில்லை. இதனால் மாருதி, ஹூண்டாய் நிறுவனத்திடம் டாடா தனது இடத்தை இழந்தது.
டாடா
அங்கு விட்ட சந்தையை மின்சார கார்களில் பிடிக்க வேண்டும் என்பதில் டாடா தீவிரமாக உள்ளது. டாடா டிகோர், நெக்ஸான் மற்றும் டைகர் மாடல்கள் மின்சார வாகனங்களாக வெளியிட்டுள்ளன. சமீபத்தில் ரூ. 8.49 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியது. அதற்கே மிக பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. ஒரே நாளில் பல ஆயிரம் புக்கிங்க ஆனது. இதற்கிடையே டாடா நிறுவனம் தனது மின்சார கார்கள் வரிசையை விரிவுபடுத்தியுள்ளது. கடந்த வாரம் நடந்து முடிந்த டாடா எக்ஸ்போ நிகழ்ச்சியில் அவர்கள் புதிய கார்களை அறிமுகப்படுத்தினர்.
என்ன திட்டம்
வரும் காலத்தில் மேலும் சில மின்சார கார்களை வெளியிட உள்ளதாகவும் குறிப்பாக மின்சார கார் சந்தையில் அதிக கவனத்தைச் செலுத்த உள்ளதாகவும் டாடா மோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ஷைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.. இந்தியாவில் மின்சார கார் சந்தையில் டாடா தான் இப்போது டாப் இடத்தில் உள்ளது. வரும் காலத்தில் நகரத்திற்குப் பயணிக்கச் சிறிய ரக கார்கள், சற்று தொலைதூர பயணங்களுக்கு அதற்கேற்ப கார்கள் என்று டாடா மோட்டர்ஸ் வரும் காலத்தில் பல வகையான மின்சார கார்களை வெளியிட உள்ளதாக டாடாவின் ஷைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.
5 மின்சார கார்கள்
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "வாடிக்கையாளர் தேவைகள் பல விதமாக உள்ளது. இப்போது எங்கள் வளர்ச்சி சிறப்பாக உள்ளது. அதைத் தக்கவைத்து முயல்வோம்" என்றார். இந்த கண்காட்சியில் டாடா மொத்தம் 12 கார்களை அறிமுகப்படுத்தியது. அதில் 5 கார்கள் மின்சாரத்தில் ஓடக்கூடியது. அதேபோல 12 டிரக் மாடல்களையும் அறிமுகப்படுத்தியது. அதில் ஒன்று ஹைடிரஜன் எரிபொருளில் ஓடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் சந்தையைக் காட்டிலும் மற்ற சந்தையில் டாடா எந்தளவுக்கு ஆர்வம் காட்டி வருகிறது என்பதற்கு இதுவே உதாரணம்..
வரும் காலத்தில் திட்டம் என்ன
டாடா மோட்டர்ஸ் தனது பிரபல ஹாரியர் மற்றும் சியரா எஸ்யூவிகளின் மின்சார மாடல்களையும் புதிய மின்சார கார் மாடலையும் 2025இன் பிற்பகுதியில் அறிமுகப்படுத்த உள்ளது. ஏற்கனவே இப்போது மின்சார கார் சந்தையில் டாடா முன்னிலையில் உள்ள நிலையில், 2026 மார்ச் மாதத்திற்குள் டாடா குறைந்தது 10 மாடல்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிடும் போது கார் சந்தை ரொம்பவே குறைவு. வேகமாக அதிகரிக்கும் இந்த சந்தையைப் பிடிக்கத் தான் டாடா நிறுவனம் திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது.
அதிகரிக்கும் மக்கள் ஆர்வம்
இப்போது இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் 1% மட்டும் மின்சார கார்களாக உள்ளன. அதை வரும் 2030க்குள் 30%ஆக உயர்த்த வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு.. இதற்காக வரிச் சலுகை உட்பட பல உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி எதிர்பார்த்ததைக் காட்டிலும் வேகமாக நகர்ந்து வருவதாக டாடா மோட்டர்ஸ் சேர்மேன் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
பக்கா பிளான்
மற்ற மோட்டர் நிறுவனங்களும் கூட மின்சார கார்களை உற்பத்தி செய்தாலும்.. டாடா நிறுவனத்திற்கு ஒரு பெரிய அட்வான்டேஜ் இருக்கிறது. மற்ற நிறுவனங்களுக்கு பேட்டரி, மற்றும் சிப்களை இறக்குமதி செய்வதிலேயே சிக்கல் இருக்கிறது. ஆனால், டாடா அதையும் சேர்த்து உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. டாடா ஆட்டோகாம்ப் மூலம் பேட்டரிகள், மின்சார வாகன உதிரி பாகங்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளது. சாலைகளில் எப்படி பெட்ரோல் பங்குகள் உள்ளனவோ.. அதேபோல சார்ஜிங் ஸ்டேஷன்கள் தேவை. இதற்காக டாடா பவர் மூலம் நகரங்களிலும் நெடுஞ்சாலைகளிலும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்க டாடா முடிவு செய்துள்ளது. அதாவது எல்லா பக்கமும் பக்காவாக திட்டமிட்டு டாடா மின்சார சந்தையில் இறங்கியுள்ளது.