கோவாக்சின், கோவிஷீல்டு இந்தியாவுக்கு வந்தது எப்படி? .. தடுப்பு மருந்துகளின் தொழில்நுட்பம் என்ன?
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் இன்று போடப்படும் நிலையில் இரு தடுப்பு மருந்துகளான கோவாக்சின், கோவிஷீல்டு ஆகியவை எந்த தொழில்நுட்பங்களை கொண்டு தயாரிக்கப்பட்டன என்பதை பார்ப்போம்.
கொரோனா தடுப்பூசி இன்று நாடு முழுவதும் போடப்படுகிறது. முதல் கட்டமாக 3 கோடி சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்ட, ஆபத்தான நோய்களை கொண்டுள்ளவர்கள் என 27 கோடி பேருக்கு போட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த இரு தடுப்பு மருந்துகள் யாருடைய தயாரிப்பில் உருவானவை, எத்தனை திறன் வாய்ந்தது உள்ளிட்டவை குறித்து பார்ப்போம்.
கோவின் செயலியில் பதிவு செய்வது எப்படி?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. முழு விவரம் இதோ!
கோவிஷீல்டு தடுப்பு மருந்து
கோவிஷீல்டு எனும் தடுப்பு மருந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் பிரிட்டனின் ஆஸ்ட்ராஜெனிக்க நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. இது புனேவில் உள்ள சீரம் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. இது இந்தியா போன்ற நாடுகளுக்கு நம்பிக்கைக்குரிய தடுப்பூசியாகும்.
ஃபைசர் மற்றும் மாடர்னா போன்ற தடுப்பூசிகளை போல எம்ஆர்என்ஏ எனும் புதிய அணுகுமுறை கோவிஷீல்டு தடுப்பூசியில் பயன்படுத்தப்படவில்லை. இந்த அணுகுமுறை மிகவும் சிக்கலானவை, இவை உடையக் கூடியவை.
தடுப்பூசி
இதை பராமரிக்க அல்ட்ரா கோல்ட் வெப்பநிலை தேவைப்படுகிறது. ஆனால் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு குளிர்சாதன பெட்டி இருந்தால் போதுமானது. இதில் 6 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம். இவை விலை குறைந்தவை.இந்த தடுப்பூசியில் அடினோ வைரஸின் பலவீனமான பதிப்பு பயன்படுத்தப்படுகிறது. இவை சிம்பான்சிகளை மட்டுமே பாதிக்கும். மனிதர்களை பாதிக்காது.
ஆய்வுகள்
இது உயிரணுக்களுடன் இணைந்து டிஎன்ஏவை கொரோனா வைரஸ் புரதமாக மாற்றச் சொல்கிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டி விட்டு உடலில் ஏதேனும் புதிய வைரஸ் நுழைந்தால் அதை எதிர்த்து போராட உடலை தயார்படுத்துகிறது. இது 70 சததவீதம் செயல்திறனை கொண்டுள்ளது என நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கோவாக்சின் தடுப்பு மருந்து
கோவாக்சின் தடுப்பு மருந்து இந்திய பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர் கூட்டு தயாரிப்பில் உருவானது. இது மத்திய அரசால் அனுமதி அளிக்கப்பட்ட இரண்டாவது தடுப்பு மருந்தாகும். இது வீரியமற்ற வைரஸால் செய்யப்பட்ட தடுப்பு மருந்தாகும். இதுமிகவும் பழமையான முறையாகும். இதில் மட்டுபடுத்தப்பட்ட வைரஸ்கள் உடலில் செலுத்தப்படும் போது, ஆன்டிபாடிகளை உருவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நிறுவனங்கள்
இந்த முறையில் கொரோனா வைரஸை போன்ற வைரஸ்கள் உருவாக்கப்பட்டு ரசாயனம் அல்லது வெப்பம் கொண்டு அவை அழிக்கப்பட்டு தடுப்பூசியாக தயாரிக்கப்பட்டுள்ளன. இது மிகவும் நீளமான செயல்முறையாகும். சீன நிறுவனங்களான சினோவாக் மற்றும் சின்பார்ம் ஆகிய நிறுவனங்கள் இந்த முறையை கையாள்கின்றன.
3ஆவது கட்ட சோதனை
கோவாக்சின் தடுப்பு மருந்தின் செயல்திறன் குறித்து மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள். ஏனெனில் இதன் 3ஆம் கட்ட சோதனை நிரூபிக்கப்படவில்லை. முதல் இரு சோதனைகளில் இது செயல்திறன் வாய்ந்தது என நிரூபிக்கப்பட்டாலும் 3ஆவது கட்ட சோதனை மட்டுமே அந்த தடுப்பூசி செயல்திறனுடையதா இல்லையா என்பதை சொல்லும். 3ஆம் கட்ட சோதனைகள் இன்னும் நடத்தப்படாமல் உள்ளது சுகாதார துறை நிபுணர்களை கவலையடைய செய்துள்ளது.