பிரதமரின் கிசான் திட்டம்: 7வது தவணையாக ரூ.2000 ரிலீஸ்.. உங்களுக்கு பணம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?
டெல்லி: பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ், 7வது தவணைக்கான ரூ.2000 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. பயிரிடக்கூடிய நிலங்கள் தங்கள் பெயரில் உள்ள, நலிவடைந்த விவசாயிகள் இந்த நிதி உதவியை பெறலாம்.
இந்த பணம் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவணையிலும் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் கிடைக்கிறது. இதுவரை மோடி அரசு 6 தவணைகளில் விவசாயிகளுக்கு பணம் கொடுத்துள்ளது.
டிசம்பரில் துவங்கியது
அதன் அடுத்த தவணை அதாவது ஏழாவது தவணை, இந்த மாதத்திலிருந்து, அதாவது டிசம்பர் மாதம் முதல் துவங்கியுள்ளளது. அரசு, இந்த பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பத் தொடங்கியுள்ளது. ஏழாவது தவணை இன்னும் உங்கள் கணக்கை வந்து சேரவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் சில நேரங்களில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் காலம் எடுக்கும். முதல் தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை விவசாயிகளின் வங்கிக் கணக்கை அடைந்தது. இரண்டாவது தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், மூன்றாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும் செலுத்தப்படுகிறது.
11 கோடி விவசாயிகள் பலன்
கடந்த 23 மாதங்களில், மோடி அரசு ரூ .95 கோடிக்கு மேலான பணத்தை, சுமார் 11.17 கோடி விவசாயிகள் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளது. பல விவசாயிகள் தங்களுக்கு பணம் வருவதில்லையே என்று ஆதங்கம் வெளிப்படுத்துகிறார்கள். இதற்கு காரணம், அவர்கள் பெயர், பலனாளிகள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதுதான்.
எப்படி பதிவு செய்வது?
பிரதமர் கிசான் சம்மான் நிதிக்கான pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும். அங்கு மேல் வலது பக்கத்தில், Farmers Corner என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்கீழ் புதிய விவசாயிகள் பதிவு என்பதற்கான New Farmer Registration ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், நீங்கள் ஆதார் எண்ணை குறிப்பிட்டு பயன்பெறலாம். ஏற்கனவே உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய, ஆதார் எண், வங்கி கணக்கு எண் மற்றும் மொபைல் எண்ணை உள்ளிட்டு, உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா இல்லையா என்பதை அறியலாம். எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்றால், உங்கள் பெயர் வரும். அல்லது, மாநில அரசு அல்லது உள்ளூர் வருவாய் அதிகாரி பரிந்துரைத்த நோடல் அதிகாரியை அணுகியும், உங்கள் பெயரை சேர்க்கலாம்.
புகார் எண்கள்:
உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருந்தால், பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனாவின் ஹெல்ப்லைன் எண்ணில் பதிவு செய்யலாம். இந்த எண்களை தொடர்பு கொள்ளுங்கள் ...
- பி.எம் கிசான் கட்டணமில்லா எண்: 18001155266
- பி.எம் கிசான் ஹெல்ப்லைன் எண்: 155261
- பி.எம் கிசான் லேண்ட்லைன் எண்கள்: 011-23381092, 23382401
- பி.எம் கிசானின் புதிய ஹெல்ப்லைன்: 011-24300606
- பிரதமர் கிசானின் மற்றொரு ஹெல்ப்லைன்: 0120-6025109
- மின்னஞ்சல் ஐடி: [email protected]