கோவின் செயலியில் பதிவு செய்வது எப்படி?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. முழு விவரம் இதோ!
டெல்லி: கோவின் செயலியில் பதிவு செய்தவர்களுக்கே கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படுகிறது என்பதால் அவற்றை எப்படி பயன்படுத்துவது, அதில் பதிவு செய்ய என்னென்ன நடைமுறைகள் தேவை என்பதை பார்ப்போம்.
இந்தியாவில் இன்று முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக மத்திய அரசின் டிஜிட்டல் தளமான கோவின் செயலி மூலம் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இந்த செல்பேசி செயலி மூலம் தடுப்பூசி தொடர்பான பயனாளிகளின் பதிவுகள் பராமரிக்கப்படும். இது தவிர, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதார ஊழியர்களின் தரவுத்தளத்தையும் அரசு தயாரித்துள்ளது.
Co Win: கோவின் செயலியில் பதிவு செய்தோருக்கே கொரோனா தடுப்பூசி
செயலி
தற்போதைய சூழலுக்கு இவற்றை அனைத்து தரப்பினரும் பயன்படுத்த முடியாது. அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் போதுதான் அவரை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோர் மூலம் டவுன்லோடு செய்யலாம். தடுப்பூசி செயல்முறையை எளிதாக்குவதற்காகவே மத்திய அரசு இந்த செயலியை உருவாக்கியுள்ளது.
புகைப்பட அடையாள அட்டை
இதன் பயன்பாடு முழுமையடைந்த பின்னரே பொதுமக்கள் பயன்படுத்த முடியும். முழுமை அடைந்த பிறகு இதில் பதிவு செய்ய மூன்று ஆப்ஷன் கொடுக்கப்பட்டிருக்கும். சுய பதிவு, தனிப்பட்ட பதிவு, தொகுப்புப் பதிவு. கோவின் செயலியில் பதிவு செய்ய புகைப்பட அடையாள அட்டை அவசியம்.
ஆவணங்கள்
சுய பதிவுக்காக பதிவு செய்வோர் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட அட்டை, வங்கி பாஸ் புத்தகம். தபால் அலுவலக பாஸ் புத்தகம், பாஸ்போர்ட், ஓய்வூதிய ஆதாரம் கடிதங்கள் உள்ளிட்ட புகைப்பட அடையாள ஆவணங்களில் ஒன்றை பதிவு செய்யலாம்.
கோவின் செயலி
இவற்றை கொண்டு இ-கேஒய்சி எனப்படும் பயனாளிகளை அறிந்து கொள்ளும் படிவத்தை பயனாளி நிரப்ப வேண்டும். கோவின் செயலியில் பதிவு செய்த பிறகு பயனாளியின் செல்பேசி எண்ணிற்கு கோவிட் 19 தடுப்பூசி போடப்படும் இடம், தேதி, நேரம் ஆகிய தகவல்கள் வரும்.கோவின் செயலியில் 5 வகை பதிவுதள் உள்ளன.
அமர்வுகள்
நிர்வாகி தொகுதி, பதிவு தொகுதி, தடுப்பூசி தொகுதி, பயனாளியின் தொகுதி, அறிக்கை தொகுதி ஆகியவையாகும். இவற்றில் நிர்வாகி தொகுதி தடுப்பூசி அமர்வில் ஈடுபடுவோருக்கானது. பதிவு தொகுதி மூலம் பதிவுசெய்த நபர்களின் தகவல்களை நிர்வாகி பெறுவார். அதன்பிறகுஅவர்கள் அமர்வுகளை ஏற்பாடு செய்வார்கள், தடுப்பூசியை போடுவதற்கான தகவல்கள் மற்றும் எச்சரிக்கைகள் போன்ற தகவல்கள் பகிரப்படும்.
புதுப்பிக்கும் விவரம்
தடுப்பூசி தொகுதியில் கோவின் பயனாளிகளின் விவரங்களை சரிபார்த்து அவர்களின் தடுப்பூசி செயல்முறையை புதுப்பிக்கும் விவரம் பதிவாகும். பயனாளி தொகுதியில் தடுப்பூசி பெறுவோரின் விவரங்கள், தடுப்பூசி விவரங்கள் பதிவேற்றப்படும். அறிக்கை தொகுதியில் எத்தனை தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது போன்ற விவரம் பதிவேற்றப்பட்டு பயனாளிகளுக்கு கியூ ஆர் ஸ்கேன் கோடு அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும்.