அப்போது மயில்சாமி.. இப்போது சிவன்.. இந்தியாவை தலை நிமிர வைத்த 2 தமிழர்கள்.. இஸ்ரோவின் விழுதுகள்!
இஸ்ரோவின் தொடர் விண்வெளி சாதனைகளுக்கு பின் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கே சிவன் என்ற இரண்டு தமிழர்களின் அளப்பரிய பங்கு அதிகம் இருக்கிறது.
Recommended Video
டெல்லி: இஸ்ரோவின் தொடர் விண்வெளி சாதனைகளுக்கு பின் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கே சிவன் என்ற இரண்டு தமிழர்களின் அளப்பரிய பங்கு அதிகம் இருக்கிறது.
இஸ்ரோவின் சந்திரயான் 2 தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் 48 நாட்களில் சந்திரயான் 2 சரியாக நிலவின் தென் பகுதியை அடையும்.
தற்போது வெற்றிகரமாக பூமியின் குறைந்த 170 கிமீ வட்டப்பாதையை சந்திரயான் அடைந்து உள்ளது. இனி பூமியை நீள்வட்டப்பாதையில் சுற்றும் சந்திரயான் பின் நிலவை நோக்கி நகர தொடங்கும்.
இரண்டு பேர்
இஸ்ரோவின் தொடர் விண்வெளி சாதனைகளுக்கு பின் இரண்டு தமிழர்கள்தான் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கே சிவன் என்ற இரண்டு தமிழர்களின் உழைப்பு இஸ்ரோவின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஆகும். அதிலும் மயில்சாமி அண்ணாதுரை சந்திரயான் 1 மற்றும் 2 இரண்டிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்திரயான் 1
சந்திரயான் 1 திட்டம் தொடங்கப்பட்ட போது அதன் திட்ட இயக்குனராக இருந்தவர்தான் மயில்சாமி அண்ணாதுரை. இவரின் கட்டுப்பாட்டின் கீழ்தான் சந்திரயான் 1 உருவாக்கப்பட்டு, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. 2008ல் இவர் இந்த சாதனையை நிகழ்த்திய உடன் உடனே சந்திரயான் 2 திட்டம் இவரின் தலைமையில் கீழ் உருவாக்க தொடங்கப்பட்டது.
வந்தார்
அதன்பின் அவரின் ஓய்வை தொடர்ந்து சந்திரயான் 2 பணிகள் கொஞ்சம் தொய்வு அடைந்தது. இதையடுத்து இஸ்ரோவின் தலைவராக தமிழரான கே சிவன் நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டதும் சந்திரயான் 2வை உடனடியாக விண்ணில் செலுத்துவோம் என்று கூறினார். பணிகளை வேகமாக முடுக்கிவிட்டார்.
என்ன குறி
இந்த வருட டிசம்பர் மாதம் குறி வைக்கப்பட்டு அதற்கு முன்பாக தற்போது ஜூலை மாதத்திலேயே சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது . ஒரு வாரம் தாமதம் ஆனாலும் எந்த தவறும் இல்லாமல் துல்லியமாக சந்திரயான் 2 விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.
இரண்டு பேரும்
இப்படி இஸ்ரோவின் இரண்டு பெரிய சாதனைகளுக்கு பின்பாகவும் தமிழர் இரண்டு பேர்தான் இருந்துள்ளனர். தலைமை பொறுப்பில் இருந்த இவர்கள் இருவர் மட்டுமின்றி திருநெல்வேலி மஹேந்திரகிரியில் இஸ்ரோவிற்காக ஓயாமல் உழைக்கும் இன்னும் பல தமிழர்களும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் ஆவார்கள்.
எப்படி
ஆம் திருநெல்வேலி மஹேந்திரகிரியில் உள்ள ISRO Propulsion Complex (IPRC) தற்போது அனுப்பட்ட ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மகேந்திரகிரியில்தான் திரவ எரிபொருள் என்ஜின் அதாவது கிரையோஜெனிக் என்ஜின் உருவாக்கப்படுகிறது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் கிரையோஜெனிக் என்ஜின் மூலம் இயங்க கூடியது. இது இந்தியாவில் சுயமாக உருவாக்கப்பட்ட எஞ்சின் ஆகும். இதன் மூலம் தான் சந்திரயான் 2 செலுத்தப்பட்டுள்ளது. இங்கு தமிழர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்
கூகுள் தொடங்கி இஸ்ரோ வரை தற்போது தமிழர்கள்தான் முக்கிய பொறுப்புகளில் இருக்கிறார்கள் என்பது நமக்கு பெருமை சேர்க்க கூடிய விஷயம். இந்த சாதனை தமிழர்கள் மயில்சாமி அண்ணாதுரை மற்றும் கே சிவன் இருவரும் தமிழ் வழி கல்வியில், தமிழகத்தில் படித்தவர்கள் என்பதும் கூடுதல் சிறப்பு!