நிமிடத்திற்கு 48,000.. ஒரே நாளில் 2.5 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி! சீன சாதனையை முறியடித்த இந்தியா
டெல்லி: ஒரே நாளில் 2.5 கோடி கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி நேற்று இந்தியா உலக சாதனை படைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை ஒட்டி நாடு முழுக்க கூடுதலாக தடுப்பூசிகள் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததன் காரணமாக இந்த சாதனை சாத்தியப்பட்டுள்ளது.
பாஜக கட்சியினர் கிராமம் கிராமமாக சென்று மக்களை திரட்டி வந்து தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுகளை செய்திருந்தனர். மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் முந்தைய சில நாட்களில் தடுப்பூசிகளின் அளவு குறைக்கப்பட்டு நேற்றையதினம் இருப்பு வைக்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.
உதாரணத்திற்கு .. வழக்கமான சராசரியைவிட கர்நாடகாவில் சுமார் 16 மடங்கு அதிகப்படியாக நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. பீகாரில் நான்கு மடங்குக்கும் அதிகமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுவரை இல்லாத சாதனை.. பிரதமர் மோடி பிறந்த நாளான இன்று.. இந்தியாவில் 2 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி
இரண்டரை கோடி தடுப்பூசிகள்
இது போன்ற நடவடிக்கைகளின் மூலமாக நேற்று ஒரே நாளில் இரண்டரை கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இந்த சாதனை அளவுக்காக ஒவ்வொரு இந்தியர்களும் பெருமை படவேண்டும் என்றும், டாக்டர்கள், கண்டுபிடிப்பாளர்கள் , நிர்வாகிகள், செவிலியர்கள், சுகாதார துறை பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் இந்த சாதனை உரித்தாகும். கொரோனா நோய்த்தொற்றை ஒழிப்பதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை நாம் மேலும் மேலும் துரிதப்படுத்த வேண்டும், என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு நிமிடத்திற்கு 48,000
இந்தியா படைத்துள்ள இந்த சாதனைக்கு உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பிரிவு ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளது. இன்னும் ஒரு மைல் கல்லை இந்தியா எட்டியதற்கு வாழ்த்துக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுக்க நேற்று ஒரு வினாடிக்கு 800 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்கிறது புள்ளிவிவரம் . அதாவது ஒரு நிமிடத்துக்கு 48000 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
100 கோடி பேருக்கு தடுப்பூசி
கண்டிப்பாக இது மிகப்பெரிய சாதனைதான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதேநேரம் தினந்தோறும் இந்த அளவுக்கு தடுப்பூசி சப்ளை தினமும் கிடைப்பதில்லை என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது . இந்தியாவில் தினசரி சராசரியாக 70 லட்சம் முதல் 80 லட்சம் வரை தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. தினந்தோறும் சுமார் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது சராசரி அளவாக மாறினால்தான், இந்த ஆண்டு இறுதிக்குள், 100 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இந்திய அரசின் வாக்குறுதியை விரைவில் நிறைவேற்ற முடியும் என்கிறார்கள் சுகாதாரத் துறை வல்லுனர்கள்.
சமூக இடைவெளி இல்லை
நேற்று ஒரே நாளில் சாதனை அளவாக நிறைய பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று முயற்சி செய்யப்பட்டதால், தடுப்பூசி மையங்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை. எனவே தினசரி சராசரியாக தடுப்பூசிகளை செலுத்துவதுதான் சுகாதார பணியாளர்களின் பணிச் சுமையை குறைக்கும். தடுப்பூசி செலுத்த வருபவர்களுக்கும் சமூக இடைவெளியை பராமரிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சில வல்லுனர்கள் அறிவுரையும் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சீனா சாதனை முறியடிப்பு
இதனிடையே, பைசர், ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட வேறு சில மருந்து நிறுவனங்கள் உடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர்களிடம் இருந்தும் தடுப்பூசி கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சீனாவில், கடந்த ஜூன் மாதம் ஒரே நாளில் இரண்டு கோடியே நாற்பத்தி ஏழு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது தான் இதுவரை உலக சாதனையாக இருந்தது. அதை இந்தியா முறியடித்துள்ளது.