கெஜ்ரிவால் சிங்கிளாக ஜெயிக்க.. இந்த சிங்கப் பெண்கள்தான் காரணமாம்.. அசத்திய பெண் படை!
Recommended Video
டெல்லி: பெண்களின் வாக்கு சக்தியால் டெல்லியில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி. இது தொடர்பாக ஆகில நாளிதழ் வெளியிட்டுள்ள தகவலில் ஆண்களை விட பெண்கள் 11 சதவீதம் பேர் ஆம் ஆத்மிக்கு ஓட்டு போட்டுள்ளதாக கூறியுள்ளது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் தொடர்ச்சியான இரண்டாவது மகத்தான வெற்றியை உறுதி செய்ததில் முக்கிய பங்கு வகித்தவர்கள் என்றால் அது பெண்கள் தான் என சில புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. '
டெல்லி தேர்தல் தொடர்பாக லோக்நிதி- சிஎஸ்டிஎஸ் (Lokniti-CSDS) அமைப்பு எடுத்த ஆய்வின் முடிவுகளை பிரபல ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.
ஆம் ஆத்மி வெற்றி
அதில் உள்ள தகவலின்படி, டெல்லி தேர்தலில் பெண்களின் ஓட்டுக்களே ஆம் ஆத்மியின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமாக அமைந்தது. ஆண்களின் பேச்சை கேட்டுத்தான் பெண்கள் வாக்களிக்கிறார்கள் என்ற , நீண்டகால நம்பிக்கையை தகர்த்துள்ளனர். 2020 டெல்லி தேர்தலில் வாக்களிக்கும் விருப்பங்களில் பாலின ரீதியாக மாறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் பெண்கள் வாக்களிக்கவில்லை என்றால், ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி சராசரியாகவே இருந்திருக்கும். இந்த அளவுக்கு மிகப்பெரிய வெற்றியாக இருந்திருக்காது. இந்ததேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆண்கள் 49 சதவீதம் பேரும் பெண்கள் 60 சதவீதம் பேரும் வாக்களித்திருக்கிறார்கள்.
ஆண்கள் குறைவு
2015 மற்றும் 20220 டெல்லி சட்டசபை தேர்தலில் பாலின ரீதியாக ஒவ்வாரு கட்சிகளுக்கும் கிடைத்த வாக்கு சதவித்தை பார்த்தோம் என்றால், ஆம் ஆத்மிக்கு ஆண்கள் கடந்த முறையை விட 6 சதவீதம் குறைவாகவே வாக்களித்திருக்கிறார்கள்.அதாவது 49 சதவீதம் பேர் வாக்களித்துள்ளார்கள்.அதேநேரம் பெண்கள் 7 சதவீதம் பேர் அதிகம் வாக்களித்துள்ளார்கள். அதாவது கடந்த முறை 53 சதவீதம் பெண்கள் ஆம் ஆத்மிக்கு வாக்களித்த நிலையில் இந்த முறை 60 சதவீதம் பேர் வாக்களித்துள்ளார்கள்.
பெண்கள் வாக்குகள்
அதேநேரம் பாஜகவுக்கு ஆண்கள் கடந்த முறையை விட 11 சதவீதம் பேர் அதிகம் வாக்களித்திருக்கிறார்கள். அதாவது டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்தவர்களில் 43 பேர் ஆண்கள் ஆவர். பெண்களின் ஒரு சதவீதம் அதிகரித்து 35 சதவீதம் ஆக இந்த தேர்தலில் இருந்தது.
சரிந்த வாக்குகள்
காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலில் 9 சதவீதம் ஆண்கள் வாக்களித்த நிலையில் இந்த முறை 5 சதவீதம் ஆண்களே வாக்களித்தனர். அதேபோல் 10 சதவீதம் பெண்கள் கடந்த முறை வாக்களித்த நிலையில் இந்த முறை வெறும் 3 சதவீதம் பெண்களே காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி தேர்தலில் வாக்களித்து உள்ளார்கள்.
பிராமண ஆண்கள்
தலித் பெண்கள் மத்தியில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்குப் பங்கு தலித் ஆண்களை விட 25 சதவீதம் அதிகமாகவும், ஜாட், குஜ்ஜார் மற்றும் யாதவ் பெண்கள் (ஒருங்கிணைந்த) 18 சதவீத புள்ளிகள் அதிகமாகவும் காணப்பட்டது. பிராமண ஆண்களில், ஆம் ஆத்மி கட்சிக்கு பாஜகவை விட 22 புள்ளிகள் குறைவான ஆதரவு கிடைத்தது, பிராமண பெண்கள் மத்தியில் பாஜகவைவிட 7 சதவீத புள்ளிகள் குறைவாக கிடைத்துள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
ஒபிசி பெண்கள் வாக்குகள்
இதேபோல், தலித் ஆண்களிடையே, ஆம் ஆத்மி கட்சி 21 சதவீத புள்ளிகள் பாஜகவை விட அதிகமாக இருந்தது. தலித் பெண்கள் மத்தியில் பாஜகவை விட 65 சதவீத புள்ளிகள் ஆம் ஆத்மிக்குஅதிகம் கிடைத்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஒபிசி சமூகங்களைச் சேர்ந்த ஆண்கள் மத்தியில், ஆம் ஆத்மி கட்சிக்கு பாஜகவை விட குறைவான வாக்குகள் கிடைத்தன, ஓபிசி பெண்கள் மத்தியில், ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகமான வாக்குகள் கிடைத்தன, அதுவும் மிகப்பெரிய வித்தியாசத்தில் கிடைத்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளத. இந்த காரணங்களால் பெண்களின் வாக்கு சதவீதம் காரணத்தால் தான் டெல்லியில் ஆம் ஆத்மி இப்படி ஒரு மகத்தான வெற்றி பெற்றுள்ளதாக ஆய்வு விவரங்கள் கூறுகின்றன.
ஆம் ஆத்மி ஆட்சி
டெல்லியில் ஆம் ஆத்மி மொத்தம் உள்ள 70 இடங்களில் 62 இடங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பாஜக 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக திணறி வருகிறது. காங்கிரஸ் டெல்லியில் சுத்தமாக காணாமால் போய்விட்டது. போட்டியிட்ட 66 இடங்களில் 63 இடங்களில் டெபாசிட்டை பறிகொடுத்து பரிதாபமாக தோற்றுள்ளது. பெரும் வெற்றிபெற்றதால் வரும் பிப்ரவரி 16ம் தேதி ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.