டெல்லியில் அதிமுகவுக்கு பிரமாண்ட அலுவலகம்... கட்டுமானப் பணிகள் தீவிரம்
டெல்லி: அதிமுகவுக்கு தலைநகர் டெல்லியில் பிரமாண்ட அலுவலகம் கட்டப்பட்டு வரும் நிலையில் அதன் கட்டுமான பணிகளை விரைவில் முடிக்க அறிவுறுத்தியுள்ளது அக்கட்சியின் தலைமை.
கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றி இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்துக்கு அக்கட்சியை கொண்டு சென்றது.
இதையடுத்து டெல்லியில் அதிமுகவுக்கு ஒரு அலுவலகம் இருக்க வேண்டும் என எண்ணிய ஜெயலலிதா அவர் உயிருடன் இருந்தபோதே அதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
டெல்லி அலுவலகம்
டெல்லி ஷாகேத் பகுதியில் அதிமுகவுக்கு பிரமாண்ட கட்சி அலுவலகம் உருவாகி வருகிறது. மூன்றடுக்கு கட்டடமாக உருவாகி வரும் அதன் கட்டுமான செலவு பல சி க்களை தாண்டும். 99 ஆண்டு கால குத்தகை அடிப்படையில் மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில் இந்த அலுவலகம் உருவாகி வருகிறது.
அனைத்து வசதி
25 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டு வரும் இந்த அலுவலகம் அனைத்து நவீன வசதிகளும் உள்ளடங்கிய வகையில் உருவாகிறது. மேலும், டெல்லி சென்றால் அதிமுக தலைமை மற்றும் முக்கிய நிர்வாகிகள் தங்கிக்கொள்ளும் வகையில் அறைகளும் அந்த அலுவலகத்தில் அமைக்கப்படுகின்றன.
கடந்த மாதம்
மகாத்மா காந்தி 150 வது பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க கடந்த மாதம் டெல்லி சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலக கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டார். மேலும், உள்வடிவமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றியும் அறிவுறுத்தினார்.
அறிவுறுத்தல்
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மேற்பார்வையில் இந்த அலுவலகம் கட்டப்படுகிறது. முழுக்க முழுக்க அவர் தான் டெல்லி அதிமுக அலுவலக கட்டுமான பணிகளை கவனித்துக்கொள்கிறார். இந்நிலையில் பணிகளை விரைந்து முடிக்குமாறு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அறிவுறுத்தியுள்ளனர்.