ஹைதராபாத் என்கவுண்டர்.. போலீஸ் மீது எப்.ஐ.ஆர்.. உச்சநீதிமன்றத்தில் அதிரடி வழக்கு
Recommended Video
டெல்லி: ஹைதராபாத் கால்நடை, பெண் மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கு தொடர்பான என்கவுண்டரில் தொடர்புள்ள போலீசார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என்று, பொதுநல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெண் டாக்டர் எரித்து கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் வைத்து, குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்த நால்வரும், நேற்று அதிகாலை போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஐயப்பாடுகள் எழுப்பப்பட்டன. இந்த என்கவுண்டர் சம்பவத்திற்கு, திமுக எம்.பி.யான கனிமொழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலபாரதி உள்ளிட்டோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடம்
இதுகுறித்து, போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் நேற்று பிற்பகல் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தினோம். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட இடத்திற்கு 4 பேரையும் அழைத்து வந்தோம். இன்று காலை சுமார் 5.45 மணியளவில், கொலை நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்றோம்.
துப்பாக்கி பறிப்பு
அப்போதுதான் திடீரென குற்றவாளிகள் 4 பேரும் கற்களை எடுத்து காவல்துறையினர் மீது வீசினர். கம்புகளை எடுத்து அடித்தனர். காவல்துறையினரின் துப்பாக்கியை பிடுங்கி சுடத் தொடங்கினர். இருப்பினும் காவல்துறையினர் பொறுமையை கடைபிடித்து 4 பேரையும் சரணடையுமாறு மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டனர். அதை அவர்கள் ஏற்கவில்லை என்பதால் வேறு வழியின்றி காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் நான்கு பேரும் கொல்லப்பட்டனர்.
இரு போலீசார்
வெங்கடேஷ் என்ற சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் இந்த தாக்குதலில் காயமடைந்து உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பொதுநல வழக்கு
இந்த நிலையில், என்கவுண்டர் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதால், போலீசார் மீது எப்.ஐ.ஆர். எனப்படக்கூடிய முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று, உச்சநீதிமன்றத்தில் இன்று சுப்ரீம் கோர்ட் வக்கீல்கள் மணி மற்றும் பிரதீப் குமார் ஆகியோர் சார்பில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 10 போலீசார் சம்பவத்தின்போது உடனிருந்தனர் என போலீஸ் கமிஷனர் கூறியிருந்தார். எனவே அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை பாய வேண்டும் என்பது இந்த வழக்கின் நோக்கமாகும்.