அப்பாவை பற்றி பேசுவது இருக்கட்டும்.. முடிந்தால் இதை பேசுங்கள்.. மோடிக்கு பிரியங்கா சவால்!
பிரதமர் மோடியின் பிரச்சாரம் குறித்து காங்கிரஸ் உத்தர பிரதேச கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சவால் ஒன்றை விடுத்து இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் உத்தர பிரதேச கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி சவால் ஒன்றை விடுத்து இருக்கிறார்.
பிரதமர் மோடி கடந்த மாதம் வரை முன்னாள் பிரதமர் நேரு குறித்து பேசி வந்தார். நேருதான் இந்தியாவின் பிரச்சனைகளுக்கு காரணம் என்று குறிப்பிட்டு வந்தார். இதையடுத்து தற்போது கொஞ்சம் முன்னேறி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை விமர்சிக்க தொடங்கி இருக்கிறார்.
ராஜீவ் காந்தியை தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்று பிரதமர் மோடி விமர்சித்து வருகிறார். காங்கிரஸ் கட்சியினரை இது பெரிய அளவில் எரிச்சல் அடைய வைத்துள்ளது.
மொத்தம் ராஜீவ் காந்தி மீது மோடி மூன்று விமர்சனங்களை வைத்துள்ளார்.
1. ராஜீவ் காந்தியை மிஸ்டர் கிளீன் என்று சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. போபர்ஸ் வழக்கில் சிக்கிய உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது.
2. நான் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சவால் விடுகிறேன்முடிந்தால் நீங்கள் ராஜீவ் காந்தியின் பெயரை சொல்லி வாக்கு கேளுங்கள். டெல்லியில் அவர் பெயரை சொல்லி உங்களால் வாக்கு கேட்க முடியுமா?.
3. ராஜீவ் காந்தி இந்திய ராணுவத்தின் போர் கப்பல்களை தனது டாக்சி போல பயன்படுத்தினார். அவர் ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பலை எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்றார், என்று மோடி குறிப்பிட்டார்.
இந்த நிலையில் மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் உத்தர பிரதேச கிழக்கு பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பதில் அளித்துள்ளார். டெல்லியில் நேற்று முன்னாள் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்திற்காக பிரச்சார செய்த அவர் பின்வருமாறு பேசினார்.
பள்ளியில் சிறுவர்கள் ஏன் ஹோம் ஒர்க் செய்யவில்லை என்று கேட்டால் அதற்கு பொய்யான காரணம் சொல்வார்கள். என் நோட்டு புக் காணாமல் போய்விட்டது. தூங்கிவிட்டேன் என்று நிறைய காரணம் சொல்வார்கள். அப்படித்தான் மோடி தற்போது பேசி வருகிறார்.
நேரு என்னை வேலை செய்ய விடவில்லை, இந்திரா காந்தி என்னை வேலை செய்ய விடவில்லை. அவர் என் ஹோம் ஒர்க் புத்தகத்தை திருடிவிட்டார். நேரு என் பேனாவை திருடிவிட்டார் என்று மோடி காரணம் கூறி வருகிறார். மோடி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
தொடர்ந்து ராஜீவ் காந்தியை விமர்சிக்கும் மோடி.. கோபத்தில் ராகுல் காந்தி.. வழக்கு தொடுக்க முடிவு!
மோடியால் பாஜக செய்த விஷயங்கள் குறித்து பேச முடியாது. நான் மோடிக்கு சவால் விடுகிறேன். மோடிக்கு தைரியம் இருந்தால் ஜிஎஸ்டி குறித்து, டிமானிடைசேஷன் குறித்து, பெண்கள் பாதுகாப்பு குறித்து, வேலைவாய்ப்பின்மை குறித்து பேச முடியுமா?
இதை எல்லாம் சொல்லி அவரால் வாக்கு கேட்க முடியுமா? அடுத்த இரண்டு கட்ட தேர்தல்களை மோடியால் இப்படி எதிர்கொள்ள முடியுமா?, நான் சவால் விடுகிறேன். முடிந்தால் அவர் பேசட்டும் இதைப்பற்றி என்று பிரியங்கா காந்தி சவால் விட்டுள்ளார்.