100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும்.. ஏழைக்களுக்காக இனி இதைத்தான் செய்வோம்.. மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (100 நாள் வேலை திட்டத்தை) தொடருவதில் தமக்கு விருப்பம் இல்லை என்றும், இந்தியாவில் வறுமையை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் விவசாயத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறைகள் தொடர்பான மானிய கோரிக்கை விவாதங்கள் புதன்கிழமை நடந்தது. அப்போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (100 நாள் வேலை திட்டம்) நடப்பு நிதி ஆண்டில் குறைவான நிதி ஒதுக்கியிருப்பதாக வேதனை தெரிவித்தனர்.மேலும் அதற்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அப்போது அவர்களின் கோரிக்கைக்கு மத்திய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பதிலளித்து பேசுகையில், 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும் என சூசகமாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நாங்கள் மக்கள் நலன் சார்ந்த திட்டமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை முன்னேற்றி உள்ளோம். தற்போது இந்த திட்டத்தின் கீழ் 99 சதவீத ஏழை தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை நேரடியாக வங்கி கணக்கிலேயே பெற்று வருகிறார்கள். இதில் இடைத்தரகர் தொல்லை இல்லை.
நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
இந்த திட்டத்துக்கான ஒட்டுமொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டை பொறுத்தவரை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.5 ஆயிரம் கோடி அதிகமாக ஒதுக்கி உள்ளோம். கடந்த 2018-19-ம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ.55 ஆயிரம் கோடி ஒதுக்கி இருந்த நிலையில, இந்த நிதி ஆண்டில் ரூ.60 ஆயிரம் கோடியாக உயர்த்தி உள்ளோம்.
100 நாள் திட்டம் ரத்து
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை என்றென்றைக்கும் தொடர எனக்கு விருப்பம் இல்லை. ஏனெனில் இந்த திட்டம் ஏழைகளுக்கானது. மோடி அரசை பொறுத்தவரை வறுமையை ஒழிப்பதையே லட்சியமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. எனவே வறுமையை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
எளிதாக மகளிருக்கு கடன்
மகளிர் சுயஉதவிக்குழுக்கள் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன.. அவர்களுக்கு மத்திய அரசு ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு அரசும் கடனுதவிகளை வழங்கி இருக்கிறது. இந்த கடனை குறித்த காலத்தில் அவர்கள் கட்டியும் வருகிறார்கள். பெரும் கார்ப்பரேட்டுகளின் வாராக்கடன் அளவு குறித்து இந்த அவைக்கு நன்கு தெரியும். ஆனால் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் வாராக்கடன் அளவு வெறும் 2.7 சதவீதமே உள்ளது. .
தரமான சாலை வசதி
பிரதம மந்திரி யோஜா திட்டத்தின் கீழ் 80 ஆயிரம் கோடி செலவில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டருக்கு தரமான சாலைகள் அமைக்க முடிவு செய்துள்ளோம். இந்த திட்டம் 2024-2025ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும். குடிசையில் வாழ்ந்து வரும் ஏழை மக்களுக்காக மத்திய அரசு 1.50 லட்சம் வீடுகள் கட்டி வருகிறது. வரும் 2022 ஆண்டுக்குள் மேலும் ஒரு லட்சத்து 94 ஆயிரம் வீடுகள் கட்ட உள்ளது. இந்த வீடுகளில் கழிவறை, மின்சார வசதி, சமையல் கேஸ் உள்ளிட்டவையும் இலவசமாக தரப்படும்" இவ்வாறு கூறினார்.