பாஜக பிரதமர் வேட்பாளர்.. மோடிக்கு பதில் நானா.. மனம் திறந்த நிதின் கட்கரி
டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், நரேந்திர மோடிக்கு பதிலாக தன்னை பிரதமர் வேட்பாளராக கட்சி முன்மொழியுமா என்ற கேள்விக்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதிலளித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில், நிதின் கட்கரி, இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பிற கட்சி தலைவர்களுடனும் நெருக்கமானவர் நிதின் கட்கரி என்பதால், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால், கட்கரியை அக்கட்சி பிரதமர் வேட்பாளராக முன்மொழியும். பிற கட்சிகள் ஆதரவை எளிதாக பெற முடியும் என்றெலலாம் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், நிதின்கட்கரி கூறுவதை கேளுங்கள்:
25 லட்சம் காவலாளிகளுடன் ஆடியோ கான்பிரன்சிங்கில் இன்று பேசுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
ஆலோசனை இல்லை
எங்கள் கட்சி அளவில் இப்படியெல்லாம் எந்த ஆலோசனையும் நடக்கவில்லை. இப்படி எழுதுபவர்கள் எழுதிவிட்டு போகட்டும். நரேந்திர மோடி தலைமையில், நாங்கள் முழு மெஜாரிட்டியோடு மீண்டும் ஆட்சியை பிடிக்கத்தான் போகிறோம். எனவே என்னை பிதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் காலச்சூழ்நிலையே வரவில்லை.
ஆதாரம் கேட்பதா
ராமர் கோயில், விமானப்படை தாக்குதல் போன்றவையும் அரசியலாக்கப்படுவது சரியில்லை. நமது பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு ஆதாரம் கேட்கும் எதிர்க்கட்சிகளை பார்த்து மக்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.
அரசியல் கீழ்நிலை
பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசும் வார்த்தைகள் ஏற்புடையவையில்லை. பிரதமர் பதவிக்கு என்று ஒரு கவுரவம் உள்ளது. ராகுல் காந்தி தனது மோசமான பேச்சுக்களால் அரசியலை மற்றொரு கீழ்நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
சாதனைகள் இருக்கே
மத்திய அரசு கொண்டுவந்த மேம்பாட்டுத் திட்டங்கள் எங்களுக்கு மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பை ஏற்படுத்தி தரும். கடந்த ஆட்சியாளர்கள் சாதனைகளோடு, எங்கள் சாதனைகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே அது புரியும். ராமர் கோயில் விவகாரத்தில் சுமூக தீர்வுக்கான வாய்ப்புகள் நீதிமன்றம் மற்றும் பேச்சுவார்த்தை மட்டுமே. இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.