இவர்தான் ஜலாத்.. பெட்ஷீட் வியாபாரி.. முதல் முறையாக திகாருக்குப் போகிறார்.. அந்த நால்வரை தூக்கிலிட!
4 பேரையும் தூக்கில் போட ஹேங்மேன் தயாராக இருக்கிறார்
Recommended Video
டெல்லி: கயிறு ரெடி.. ஹேங்மேனும் ரெடி.. 4 பேரை தூக்கில் போடுவதுதான் பாக்கி.. நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் 22-ந்தேதிக்குள் தூக்கில் போடப்பட வேண்டும் என்று டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டதை அடுத்து அதற்கான ஏற்பாடுகள் திகார் ஜெயிலில் மிக மிக தீவிரமாக நடந்து வருகின்றன.
2012-ல் டெல்லியில் ஓடும் பஸ்ஸில் 23 வயது மருத்துவ மாணவி நிர்பயாவை 6 பேர் கும்பல் கூட்டாக நாசம் செய்து.. அதே பஸ்ஸில் இருந்து தூக்கி வெளியே வீசியது. டெல்லியில் நடந்த இந்த கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அக்ஷய் சிங் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
கீழமை கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை இவர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது. எப்போது வேண்டுமானாலும் தண்டனை விவரம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று டெல்லி கோர்ட் தூக்கு தண்டனையை வழங்கி உத்தரவிட்டது.
தூக்கு தண்டனை
பொதுவாக இந்தியாவில் மரண தண்டனை என்பது அரிதான ஒன்றுதான்.. கடைசியாக 2015-ல் மும்பை குண்டு வெடிப்பு கைதி யாகூப் மேமன் தூக்கில் போடப்பட்டான். அதனால் இப்படி கைதிகளை தூக்கில் போடுவதற்கு என்று தனியாக எந்த ஜெயிலிலும் ஊழியர்களும் நம்மிடம் நிரந்தரமாக இருப்பது இல்லை.
திகார் ஜெயில்
எப்போதாவது இப்படி யாரையாவது தூக்கில் போட நேர்ந்தால், தற்காலிக ஊழியர்களை அந்த நேரத்தில் மட்டும் கூப்பிட்டு கொள்வது வழக்கம். ஒரு சிலர் பரம்பரையாகவே இந்த வேலையை பார்த்து வருகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.. ஆனால் திகாரில் இதற்கான ஊழியர்கள் இல்லை.. ஆனால் மீரட் ஜெயிலில் ஒருத்தர் இருக்கிறாராம்.. அவர் பெயர் பவான் ஜலாத்.. இவர் குடும்பத்தில் 4 தலைமுறையாகவே தூக்கு தண்டனையை நிறைவேற்றும் ஊழியர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர்.
பெட்ஷீட் வியாபாரி
பகத்சிங், ராஜகுரு, சுக்தேவ் என்ற போராட்ட வீரர்களை லாகூர் ஜெயிலில் தூக்கில் போட்டதும், இந்த பவான் ஜலாத்தின் தாத்தா தானாம்.. இப்போது பலான் ஜலாத் பெட்ஷீட் வியாபாரம் செய்து வருகிறார்.. சைக்கிளில்தான் பெட்ஷீட்டுகளை கட்டி எடுத்து கொண்டு போய் விற்று வருகிறார்.. நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கில் போட வேண்டி வரும் என்று ஏற்கனவே மீரட் ஜெயில் நிர்வாகத்தினர் ஜலாத்திடம் சொல்லி இருந்தார்களாம்.
சிறை நிர்வாகம்
இப்போது தண்டனை உறுதியான நிலையில், உடனடியாக ஜலாத்துக்கு தகவலை தெரிவித்துள்ளனர்.. எனினும் முறைப்படி சிறை நிர்வாகம் கடிதமும் அனுப்பும் என தெரிகிறது. தூக்கில் போடுவதை பற்றி ஜலாத்திடம் கேட்டால், "4 பேரையும் தூக்கில் போடும் இந்த வேலையை செய்ய நான் ரெடியாக இருக்கிறேன்.. இந்த மாதிரி கொடிய குற்றவாளிகளை கொல்வதன் மூலம் சமுதாயத்துக்கு அழுத்தமான ஒரு செய்தியை சொல்வதாக இருக்கும்.
நான் ரெடி
ரொம்பவும் கீழ்த்தரமான வேலையை இந்த 4 பேரும் செய்திருக்கிறார்கள்.. மரண தண்டனையை நிறைவேற்றினால், அதன்மூலம் நிர்பயா குடும்பதினருக்கும், பொதுமக்களுக்கும் ஒரு ஆறுதலாவது கிடைக்கும்.. அதனால் இந்த பணியை நிறைவேற்ற நான் ரெடி.. ஆனால், தூக்கில் போட ஏற்பாடு செய்ய எப்படியும் 2, 3 மணி நேரம் ஆகும்.. அந்த தூக்கு கயிறு வலுவா இருக்கா? தூக்கு மேடை சரியா இருக்கா? இதெல்லாம் பார்க்கணும். மத்தபடி இந்த மாதிரி ஆட்களை தூக்கில் போட எனக்கு மனசில் எந்த வருத்தமும் துளியும் இல்லை" என்கிறார்.
பரபரப்பு
இருந்தாலும் இதுவரை ஜலாத் யாரையுமே தூக்கில் போட்டதில்லையாம்.. 4 வருஷத்துக்கு முன்பு நிதாரி கொலை வழக்கு சம்பந்தமாக தூக்கில் போட கூப்பிட்டார்களாம்.. ஆனால் அதற்குள் அந்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையாக குறைத்து விட்டார்களாம். நிர்பயா குற்றவாளிகள்தான் ஜலாத்தின் முதல் தூக்கு.. இப்படி ஹேங்மேன் முதல் கயிறு வரை ஏற்பாடுகள் அனைத்தும் திகார் ஜெயிலில் பரபரப்புடன் நடந்து வருகிறது.