தூக்கில் தொங்க நான் ரெடி.. அரசியலைவிட்டு விலக நீங்க ரெடியா? கெஜ்ரிவாலுக்கு கம்பீர் சவால்
டெல்லி: துண்டு பிரசுரம் வழங்கியதாக கூறும் குற்றச்சாட்டை கெஜ்ரிவால் நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயார் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரும், ஆம் ஆத்மி வேட்பாளராக அட்டிஷியும் போட்டியிடுகிறார்கள்.
கம்பீர் மீதான குற்றச்சாட்டு.. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்?
ஆபாச துண்டு பிரசுரம்
இந்நிலையில், அட்டிஷியை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் விமர்சிக்கும் துண்டு பிரசுரங்கள், சில அடுக்குமாடி குடியிருப்புகளில் செய்தித்தாள்களுடன் இணைத்து விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கம்பீர்தான் காரணம்
இதுகுறித்து டெல்லி துணை முதல்வர் சிசோடியாவுடன் இணைந்து அட்டிஷி நிருபர்களை சந்தித்தார். அப்போது கதறி அழுத அவர், கவுதம் கம்பீர்தான் இந்த அளவுக்கு தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
கம்பீர் மறுப்பு
அதற்கு கவுதம் கம்பீர் மறுப்பு தெரிவித்துள்ளார். இச்செயலில், தான் ஈடுபட்டதாக நிரூபித்தால், போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதற்கிடையே இருதரப்பு இடையேயும் அவதூறு நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது.
தூக்கில் தொங்க ரெடி
இந்நிலையில் துண்டு பிரசுரம் விவகாரத்தில் எனக்கு தொடர்பு என்ற குற்றச்சாட்டை கெஜ்ரிவால் நிரூபித்தால் பொது இடத்தில் தூக்கில் தொங்கவும் நான் தயார் என்ற கம்பீர், அப்படி நிரூபிக்கவில்லை என்றால் கெஜ்ரிவால் அரசியலைவிட்டு விலக தயாரா? என எழுப்பியுள்ளார்.