எங்க கட்சிக்கு நான் மட்டுமே எம்.பி... எனக்கு 5 நிமிடம் ஒதுக்குங்க... லோக்சபாவில் திருமாவளவன்
Recommended Video
டெல்லி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒரே ஒரு எம்.பி. நான்.. அதனால் 5 நிமிடங்களாவது ஒதுக்க வேண்டும் என்று லோக்சபாவில் அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசினார்.
லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது தொல். திருமாவளவன் பேசியதாவது:
மத்திய அரசின் ஸ்வச்ச அபியான் திட்டம் தொடர்பான சபாநாயகரின் கடிதம் இந்தியில் அனுப்பப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எங்களுடைய வேண்டுகோளை ஏற்று அந்த கடிதத்தை ஆங்கிலத்தில் அனுப்பியதற்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய கட்சியின் சார்பாக நான் ஒரே ஒரு எம்.பி.தான். எனக்கு எப்போதும் 2 அல்லது 3 நிமிடம்தான் ஒதுக்குகிறீர்கள்.
என்னுடைய தொகுதி பிரச்சனைகளை இந்த குறுதிய நேரத்தில் எப்படி பேச முடியும்? எனக்கு குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது ஒதுக்க வேண்டும். நான் என்னுடைய உரையை தமிழில் தொடங்குகிறேன். உலகிலேயே மிக அதிக ஊழியர்களை கொண்ட 3-வது பெரிய நிறுவனம் ரயில்வேதுறை. தெற்கு ரயில்வேயில் 15,000 அப்பரன்டிஸ் பணியாளர்கள் 14 ஆண்டுகாலமாக பணிக்காக காத்திருக்கின்றனர்.
அதிக அளவில் வெளிமாநிலத்தவர்
அண்மையில் பொன்மலை ரயில்வே பணிமனை நடத்திய தேர்வில் 1765 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் 1600 பேர் வெளிமாநிலத்தவர். தமிழகத்தைச் சேர்ந்த 165 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.
நீதிபதியின் கண்டனம்
இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரும் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் நீதிபதி, ஒரு மாநிலத்துக்கு மட்டும் இப்படி பாரபட்சம் காட்டுவது மிகவும் தவறானது. இந்த விவகாரத்தை தேசிய பிரச்சனையாக்க வேண்டும். இப்படி செய்தவர்கள் தேசவிரோதிகள் என குறிப்பிட்டிருக்கிறார். அஞ்சல்துறை தேர்வில் பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் தமிழ் பாடத்தில் தமிழ்நாட்டு மாணவர்களை விட அதிக மதிப்பெண் பெற்ற சம்பவமும் நடந்திருக்கிறது. தமிழ் மொழியே தெரியாமல் தமிழ் பாடத்தில் எப்படி அதிக மதிப்பெண்கள் பெற முடியும்? இது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியது.
அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்
இது மிகவும் அநீதியானது. தமிழகத்துக்கு மட்டும்தான் என்றில்லை.. ஒவ்வொரு மாநில இளைஞர்களுக்கும் அந்தந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை தரப்பட வேண்டும். சென்னை ரயில்வே நிலையத்தில் இந்தியில்தான் உயர் அதிகாரிகளுடன் பேச வேண்டும் என அண்மையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சட்டப்படி உள்ளூர் மொழி தெரிந்தவர்களைதான் ரயில்வே பணியாளர்களாக நியமிக்க வேன்டும். உள்ளூர் மொழி அல்லது ஆங்கிலம் தெரியாதவர்களை நியமித்தால் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. அதனால் உள்ளூர் மொழி தெரிந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.
ராமேஸ்வரம்- திருப்பதி தினசரி ரயில்சேவை
என்னுடைய சிதம்பரம் தொகுதி சுற்றுலா தலமாகும். ராமேஸ்வரத்துக்கும் திருப்பதிக்கும் இடையே வாரம் 3 முறைட தற்போது ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதை தினசரி ரயில் சேவையாக மாற்ற வேண்டும்.