என்னை முடக்கிவிட முடியாது.. இனிதான் பேசுவேன்.. நான் வலிமையாக இருக்கிறேன்.. ப. சிதம்பரம் பொளேர்!
என்னை எளிதாக முடக்கிவிட முடியாது, நான் மிக மிக வலிமையாக இருக்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: என்னை எளிதாக முடக்கிவிட முடியாது, நான் மிக மிக வலிமையாக இருக்கிறேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார்.
சட்ட போராட்டத்திற்கு பிறகு ப. சிதம்பரம் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். 106 நாட்களுக்கு பின் அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இன்று டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தியாவில் நிலவும் பொருளாதார மந்த நிலை குறித்தும், தன்னுடைய உடல் நிலை குறித்தும் அவர் பேட்டி அளித்தார்.
என்ன பேட்டி
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது பேட்டியில், என்னுடைய ஆன்மா இப்போதும் வலுவாக இருக்கிறது. என்னை எளிதாக முடக்கிவிட முடியாது. நான் மிக மிக வலிமையாக இருக்கிறேன். நான் நினைத்ததை விட என் உடலும் வலிமையாக இருக்கிறது.
வலிமை
நான் மேலும் வலிமை அடைந்துள்ளேன். நான் மரக்கட்டிலில் படுத்து தூங்கினேன். அது எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தது.என் உடல் அதனால் அதிகம் வலு அடைந்தது.என் கழுத்து வலுவாக இருக்கிறது. என் தலை வலுவாக இருக்கிறது. என் முதுகெலும்பு வலுவாக இருக்கிறது.
குரல் கொடுப்பேன்
என் குரலை ஒடுக்க முடியாது. நான் தொடர்ந்து பேசுவேன். தொடர்ந்து செய்தியாளர்களை சந்திப்பேன். தொடர்ந்து இவர்கள் செய்யும் தவறுகளை உங்களுக்கு வெளிக்காட்டுவேன். சில குரல்களை உங்களால் ஒடுக்க முடியாது. உங்களுக்கு திறமையும் இல்லை, நேர்மையும் இல்லை, உங்களிடத்தில் உண்மையும் இல்லை.
எதிர்காலம்
நாடு நல்லா இருக்கும், நல்ல எதிர்காலம் வரும் என்றெல்லாம் கூறி மக்களை இனியும் நீங்கள் ஏமாற்ற முடியாது. நான் பாராளுமன்றத்தில் இதை எல்லாம் பேசுவேன். அங்கு உங்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது. பொருளாதாரத்தை சீரழித்தவர்கள் பதில் சொல்லும் நேரம் வந்துவிட்டது, என்று ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.