விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் முயற்சி- ராகுல், பிரியங்கா, அகிலேஷ், தேஜஸ்வி சீற்றம்
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் முயற்சிகளுக்கு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். குடியரசு தினத்தன்று விவசாயிகள் போர்வையில் சில விஷமிகள் போலீசாருடன் மோதினர்.
இதனால் டெல்லி போர்க்களமானது. இதனைத் தொடர்ந்து போராட்டங்களில் இருந்து விலகுவதாக இதுவரை 4 விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனிடையே போராடும் விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை காசிப்பூர் பகுதியில் உபி அரசு மேற்கொண்டுள்ளது.
கட்டாயமாக அப்புறப்படுத்துதல்
ஆனால் விவசாயிகளோ தங்களது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். இந்த நிலையில் வலுக்கட்டாயமாக விவசாயிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
|
ராகுல் ட்வீட்
மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது ட்விட்டர் பக்கத்தில், நான் யார் பக்கம் என்பதை தேர்வு செய்ய வேண்டிய தருணம். என்னுடைய முடிவு தெளிவானது. நான் விவசாயிகள் பக்கமே நிற்கிறேன். நான் ஜனநாயகத்தின் பக்கம் நிற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
|
பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் ஜனநாயகத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கு சமம். விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் துணை நிற்கும். விவசாயிகளை ஒடுக்க நினைப்பவர்கள் துரோகிகள் என கூறியுள்ளார்.
|
அகிலேஷ், தேஜஸ்வி
சமாஜ்வாதி மூத்த தலைவர் அகிலேஷ் யாதவ், இன்று வேண்டுமானால் போராடும் விவசாயிகள் அப்புறப்படுத்தப்படலாம்; நாளை பாஜகதான் வீதிக்கு வரும் என காட்டமாக கூறியுள்ளார். ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், போராடும் விவசாயிகளின் பக்கமே ஆர்ஜேடி நிற்கிறது என கூறியுள்ளார்.