ஈழத் தமிழர்களின் சமத்துவம் , நீதி, சமாதனம், கௌரவம் குறித்த விருப்பங்கள் நிறைவேறும் - மோடி நம்பிக்கை
Recommended Video
டெல்லி: இலங்கையில் தமிழர்களின் சமத்துவம், நீதி, சமாதானம், கெளரவம் தொடர்பான விருப்பங்களை நிறைவேற்றுகிற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நம்பிக்கை இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா வருகை தந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவை டெல்லி ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் மோடி-கோத்தபாய இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்தியா எப்போதும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடி வருகிறது. இன்றைய சந்திப்பில் பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவது குறித்து ஆலோசனை நடத்தினோம்.
இலங்கை பொருளாதாரத்தை வலிமைப்படுத்த இந்தியா ரூ2,870 கோடி கடன் அளித்துள்ளது. இலங்கையில் வீட்டுத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே 50,000 வீடுகள் கட்டி தந்துள்ளோம். மேல்லும் 14,000 வீடுகள் கட்டப்பட இருக்கின்றன.
இலங்கையில் சூரிய ஒளி மின்திட்டத்தைச் செயல்படுத்த ரு720 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் ஒரு வலிமையான அரசு அமைவது என்பது இந்தியாவுக்கு மட்டும் அல்ல; இந்திய பெருங்கடல் பிராந்தியத்துக்கும் நன்மை தரும்.
இலங்கையில் வாழும் தமிழர்களின் சமத்துவம், நீதி, கெளரவம் தொடர்பான விருப்பங்களை நிறைவேற்றுகிற நல்லெண்ண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நம்பிக்கை இருக்கிறது. 13-வது அரசியல் சாசன திருத்தமும் இதில் அடங்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.