மன்மோகன் சிங் என்ன சாதி தெரியுமா?... சொல்கிறார் அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்
டெல்லி:உயர்வகுப்பினருக்கான 10 சதவீதம் இட ஒதுக்கீடு குறித்த விவகாரத்தில் மன்மோகன் சிங் எந்த சாதி என்று தமக்கு தெரியாது என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயா் வகுப்பினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை மத்திய அரசு ஜனவரி 8ம் தேதி லோக்சபாவில் தாக்கல் செய்தது. பலத்த எதிர்ப்பு, நீண்ட விவாதம் ஆகியவற்றுக்கு பின்னா் இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.
அதனை தொடர்ந்து, ராஜ்யசபாவிலும் அந்த மசோதா முன்வைக்கப்பட்டது. இட ஒதுக்கீடு தொடர்பான மசோதாவுக்கு அ.தி.மு.க., தி.மு.க, ராஷ்டிரிய ஜனதா தளம், பிஜூ ஜனதா தளம் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடும் அமளி நிலவியது.
உயர்சாதியினருக்கு இடஒதுக்கீடு
அதன் பின்னர், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீதம் இடஒதுக்கீடு மசோதா 149 உறுப்பினர்கள் ஆதரவுடன் ராஜ்யசபாவில் நிறைவேறியது. மசோதாவுக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
பாஸ்வான் பேட்டி
இந்நிலையில் உயர் வகுப்பினருக்கான 10 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவருமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவரிடம் உயர்சாதி வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மன்மோகனின் சாதி தெரியாது
அப்போது அவர் கூறியதாவது: மன்மோகன் சிங்கை தவிர காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்த அனைத்து பிரதமர்களுமே உயர் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். அதில் மன்மோகன் சிங் எந்த சதியிலிருந்து வந்தவர் என்று எனக்கு தெரியாது.
கேள்வி கேட்கும் பாஸ்வான்
இருந்த போதிலும் உயர்வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை கொண்டு வர அவர்கள் ஏன் யோசிக்கவில்லை? என்று ராம்விலாஸ் பாஸ்வான் கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள 10 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா, குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பின்னரே சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.